Published : 30 Sep 2019 03:34 PM
Last Updated : 30 Sep 2019 03:34 PM
முகப்பொலிவு க்ரீம் விளம்பரத்தில் நடித்தது ஏன் என்ற கேள்விக்கு விளக்கம் அளித்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ், அனு இம்மானுவேல், பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'நம்ம வீட்டுப் பிள்ளை'. இதில் அண்ணன் - தங்கையாக சிவகார்த்திகேயன் - ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளனர். இருவரின் நடிப்புக்குமே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்தப் படத்தை விளம்பரப்படுத்த அளித்த பேட்டியில், "இங்கு கிராமத்துப் பெண்களின் கதாபாத்திரங்களுக்குக் கூட வட இந்திய நாயகிகளைத் தான் நடிக்க வைக்கிறார்கள் எனச் சொல்லியிருந்தீர்கள். ஆனால், நீங்களே முகப்பொலிவு க்ரீம் விளம்பரத்தில் நடிப்பது நியாயமா" என்ற கேள்விக்கு கடும் காட்டமாகப் பதிலளித்தார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
அதில், "அந்த விளம்பரத்தில் என்னை நடிக்கச் சொல்லிக் கேட்டபோது நானே சிரித்துவிட்டேன். ஏனெனில் நான் மாநிறம் என்பது அனைவருக்குமே தெரியும். நான் எப்போதுமே இந்த நிறம் எனக்குதான் மிகவும் பிடித்தது என்று பலமுறை கூறியிருக்கிறேன். மாநிறமாக இருப்பவர்கள் வெள்ளையாக ஆகவேண்டும் என்று விரும்பி மாறுவதை எண்ணி தனிப்பட்ட முறையில் கூட வருந்தியிருக்கிறேன். அந்த விளம்பரத்துக்கான ஒப்பந்தத்தின் போதே ‘நான் எப்போதும் வெள்ளை நிறம்தான் சிறந்தது என்று ஊக்குவித்தது கிடையாது. பிறகு ஏன் என்னைத் தேர்வு செய்தீர்கள்?’ என்று கேட்டேன்.
அதற்கு அவர்கள் கூறிய பதில் எனக்குப் பிடித்திருந்தது. இந்த ஃபேர்னஸ் க்ரீம் வெள்ளை நிறத்துக்கானது என்று அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இது அதற்கானது அல்ல. இது முகப்பொலிவுக்கானது என்று கூறினார்கள். இது அந்த விளம்பரத்திலும் மிகவும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதே ஃபேர்னஸ் க்ரீமின் மற்ற விளம்பரங்களில் முகத்தில் நிற வித்தியாசத்தைக் குறிக்கும் ஒரு அட்டையைப் பயன்படுத்தியிருப்பார்கள். ஆனால், நான் நடித்த விளம்பரத்தில் அந்த அட்டை இடம்பெற்றிருக்காது. இது அந்த ஒப்பந்தத்திலும் இடம்பெற்றுள்ளது. இதன் பிறகே அந்த விளம்பரத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன்.
ஒருவேளை அப்படி அந்த விளம்பரத்தில் அந்த நிறத்தைக் குறிக்கும் அட்டையோ அல்லது வெள்ளை நிறம்தான் சிறந்தது என்பது போன்ற வார்த்தைகளோ இடம்பெற்றிருந்தால் என்னிடம் யார் வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம். ஆனால் அப்படி எதுவும் இல்லாததால் என்னைப் பொறுத்தவரை இதில் எந்தத் தவறும் இருப்பதாகத் தெரியவில்லை.
எத்தனையோ முன்னணி நடிகர்கள் குளிர்பான விளம்பரங்களில் நடித்து அவை உடலுக்குக் கேடு என்று தெரிந்தும் அவற்றைக் குடிக்கச் சொல்லி ஊக்கப்படுத்துகிறார்கள். அவர்களிடம் சென்று யாரும் இது போன்ற கேள்விகளைக் கேட்பதில்லை. இதுவரை ஃபேர்னஸ் க்ரீம் விளம்பரங்களில் நடித்த நடிகைகளுக்கும் எனக்கும் இருக்கும் வித்தியாசமே என்னுடைய மாநிறம்தான். அவர்கள் என்னைத் தேர்ந்தெடுத்தற்கான காரணத்தையும் அவர்கள் கூறிவிட்டார்கள். இதுதான் நான் அதில் நடிக்கக் காரணம்" என்று தெரிவித்தார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT