Published : 30 Sep 2019 12:44 PM
Last Updated : 30 Sep 2019 12:44 PM

நீரில் பிரசவம், பாலினம் சாராத பெயர்: நடிகை கல்கி கோய்ச்லின் திட்டம்

நடிகை கல்கி கோய்ச்லின் தான் கர்ப்பமாக இருப்பதாகவும், குழந்தையை நீரில் பிரசவிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பாண்டிச்சேரியில் ஃபிரெஞ்ச் பெற்றோருக்குப் பிறந்தவர் கல்கி. நாடகங்கள் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர். 'தேவ் டி' இவர் நடித்த முதல் படம். அந்தப் படத்தை இயக்கிய அனுராக் காஷ்யப்பை 2011-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

தொடர்ந்து 'ஹாய் ஜவானி, ஹாய் திவானி', 'ஜிந்தகி நா மிலேகே தோபாரா', 'தி கேர்ள் இன் யெல்லொ பூட்ஸ்', சமீபத்தில் 'கல்லி பாய்' உள்ளிட்ட படங்களில் நடித்துப் பிரபலமானார். சமீபத்தில் தமிழில் 'நேர்கொண்ட பார்வை' படத்தின் முதல் பாடலில் நடனமாடியிருந்தார். 2013-ம் ஆண்டு அனுராக்கும், கல்கியும் மனமொத்துப் பிரிவதாக அறிவித்தனர். 2015-ல் விவாகரத்து பெற்றனர்.

அனுராக்குடனான மணமுறிவுக்குப் பிறகு இனி தன் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த விஷயங்கள் எதையும் ஊடகங்களில் அதிகம் பகிர விரும்பவில்லை என்று கல்கி கூறியிருந்தார். கடந்த சில மாதங்களாக கை ஹேர்ஷ்பெர்க் என்பவரைக் காதலித்து வந்த கல்கி இந்த செப்டம்பர் மாதம் தான் அவர் தன் காதலர் என்பதைப் பொதுவில் அறிவித்தார்.

தற்போது தான் கர்ப்பமாக இருப்பதை கல்கி உறுதி செய்துள்ளார். அனுராக்குடன் உறவில் இருக்கும்போது தாய்மைக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த கல்கி, தற்போது வாழ்க்கையை வித்தியாசமாகப் பார்ப்பதாகவும், குடும்பத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

நீரில் குழந்தையைப் பிரசவிக்கத் திட்டமிட்டுள்ள கல்கி இந்த வருடக் கடைசியில் கோவாவுக்கு குடிபெயர்கிறார். மேலும் ஆண், பெண் என எந்தக் குழந்தை பிறந்தாலும், இரண்டுக்கும் பொதுவான ஒரு பெயரைத் தான் தேர்ந்தெடுத்துள்ளதாகவும், தன் குழந்தைக்குப் பாலினத் தேர்வுக்கான சுதந்திரத்தைக் கொடுக்க விரும்புவதாகவும் கூறியுள்ளார்.

கல்கியின் அறிவிப்புக்கு பாலிவுட் பிரபலங்கள் பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x