Published : 25 Sep 2019 02:39 PM
Last Updated : 25 Sep 2019 02:39 PM

அமிதாப் முன்பே இவ்விருதுக்கு தகுதியானவர்தான்; எனினும் சிறந்த கவுரவத்தைப் பெற்ற நேரம் இது: மம்மூட்டி, லதா மங்கேஷ்கர் உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்து

மும்பை,

இந்தியத் திரை உலகின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது பெற்றுள்ள அமிதாப் முன்பே இவ்விருதுக்குத் தகுதியானவர்தான். எனினும் சிறந்த கவுரவத்தைப் பெற்ற நேரம் இது என்று லதா மங்கேஷ்கர், மம்மூட்டி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பாலிவுட் திரைப்படமான 'சாத் இந்துஸ்தானி' என்ற படத்தின் மூலம் 1969 ஆம் ஆண்டு அமிதாப் பச்சன் ஒரு நடிகராக அடியெடுத்துவைத்தார்.

அமிதாப் பச்சன் "தீவார்", "ஜான்ஜீர்", "டான்" மற்றும் "ஷோலே" போன்ற படங்களில் அவர் வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்றதாக அவரது பல்வேறு வகையான ரசிகர்கள் சமூக வலைதளங்களில் நினைவுகூர்ந்து வருகின்றனர். அதே நேரத்தில் "பிளாக்", "பா" மற்றும் "பிகு" போன்ற தேசிய விருது பெற்ற அவரது நுணுக்கமான சித்தரிப்புகளை சிலர் பாராட்டி வருகிறார்கள். அவரது நகைச்சுவைக்காகவும் அவரைக் கொண்டாடும் ரசிகர்கள் உள்ளனர்,

திரையுலகில் அவருக்கு இடைவெளிகள் ஏற்பட்டு மீண்டும் களத்தில் குதித்து மீண்டும் அவர் உயரத்தைக் கண்டார். தற்போது "செஹ்ரே", "குலாபோ சீதாபோ", "சாய் ரா நரசிம்ம ரெட்டி", "பிரம்மஸ்திரா" மற்றும் "ஆன்கேன் 2" போன்ற படங்களில் மிகவும் பிஸியாக உள்ளார்..

திரைத்துறைக்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் அவரது கலைச் சேவையைக் கவுரவிக்கும் வகையில் 2018 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் உயரிய விருதான 'தாதா சாகேப் பால்கே' விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நேற்று அறிவித்தார்.

"இரண்டு தலைமுறைகளாக மகிழ்வித்து ஊக்கமளித்த திரைப்பட நடிகர் அமிதாப் பச்சன் தாதா சாகேப் பால்கே விருதுக்கு ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். முழு நாடும் சர்வதேச சமூகமும் இதனால் மகிழ்ச்சியடைகின்றன. அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்" என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ட்விட்டரில் தெரிவித்தார்.

இவற்றுக்கு பதில் அளிக்க முற்பட்ட அமிதாப் தனது ஒரு பதிவில், "உரிய பதில் அளிக்க, உயர்ந்த மனப்பான்மையைச் சொற்களால் பொழிவதற்காக தேடும்போது சொற்களின் பற்றாக்குறையே ஏற்படுகிறது. இதற்காக நான் மிகவும் ஆழ்ந்த நன்றியுணர்வும், மிகவும் பணிவுமாக இருக்கிறேன். எனது மனமார்ந்த நன்றி" என்று அமிதாப் மிகவும் உயரிய தன்னடக்கத்தோடு பதிவிட்டிருந்தார்.

அமிதாப்பின் ட்விட்டர் தளத்தில் ரசிகர்கள் தொடர்ந்து வாழ்த்து மழையே பொழிந்து வருகின்றனர். திரைத்துறையிலிருந்தும் அவருக்கு வாழ்த்துக்கள் தொடர்ந்து வந்தன.

பிரபல பாடகி லதா மங்கேஷ்கர்: "நமஸ்கர் அமித் ஜி. நீங்கள் தாதா சாகேப் பால்கே விருதுக்கு கவுரவிக்கப்பட்டதை அறிந்து நான் மகிழ்ச்சியடைகிறேன். உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். இந்திய சினிமாவின் தந்தையின் பெயரால் வழங்கப்பட்ட ஒரு விருது இந்திய சினிமாவின் மெகா ஸ்டாருக்கு வழங்கப்படுவது ஒரு வரலாற்றுச் சாதனை".

அமிதாப்பின் 'பிகு' பட இயக்குநர் ஷூஜித் சிர்கார்: "@SrBachchan ஐயா பல வாழ்த்துகள். தங்களுக்கு விருது கிடைத்தமை மிகவும் பெருமையாக உள்ளது. விரைவில் சந்திப்போம்".

நடிகர் மம்மூட்டி: "அன்பான அமித் ஜிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்! உண்மையில் எங்கள் பார்வையில் முன்பே இந்த விருதுக்கு நீங்கள் தகுதியானவர்தான். எனினும் தங்களுக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது. தாங்கள் சிறந்த கவுரவத்தைப் பெற்ற நேரம் இது.

ஜார்க்கண்ட் முதல்வர் ரகுபர் தாஸ்: மூத்த நடிகரான அமிதாப்புக்கு வாழ்த்துகள். இந்தியருக்கு அவரது பங்களிப்பு என்பது பல ஆண்டுகளாக திரை உலகைப் புதிய உயரங்களுக்கு கொண்டுசென்றதுதான். இந்திப் பட உலகில் தொடர்ந்து புதிய பரிமாணங்களைத் தரும் விதமாக மேலும் தொடர்ந்து நடிக்க வேண்டும்.

இந்திய சினிமாவில் ஒரு கலைஞருக்கு வழங்கப்படுவதிலேயே மிக உயர்ந்த கவுரவமாகக் கருதப்படும் இந்த விருது, ஸ்வர்ணா கமல் (கோல்டன் லோட்டஸ்) பதக்கம், சால்வை மற்றும் ரூ .10,00,000 ரொக்கப் பரிசை உள்ளடக்கியது. இது 2017 ஆம் ஆண்டில் மறைந்த நடிகர் வினோத் கண்ணாவுக்கு வழங்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x