Published : 23 Sep 2019 12:51 PM
Last Updated : 23 Sep 2019 12:51 PM

விஜய் சேதுபதி எனக்காக நடிக்க ஒப்புக்கொண்டார்: சிரஞ்சீவி நெகிழ்ச்சி

'சைரா நரசிம்மா ரெட்டி' படத்தில் விஜய் சேதுபதி நடித்ததற்கு அந்தப் படத்தின் நாயகன் சிரஞ்சீவி நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார்.

உய்யாலவாடா நரசிம்மா ரெட்டியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகியுள்ளது. நரசிம்மா ரெட்டியின் சுதந்திரப் போராட்டத்தை மையமாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தேஜா தயாரித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் இந்தப் படம் அக்டோபர் 2-ம் தேதி வெளியாகவுள்ளது.

நயன்தாரா, தமன்னா, அமிதாப் பச்சன், சுதீப், ஜெகபதி பாபு என பிரபல நடிகர்கள் பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் ராஜபாண்டி என்ற கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.

'சைரா நரசிம்மா ரெட்டி' படத்தின் வெளியீட்டுக்கு முன்பான பிரம்மாண்ட விளம்பர நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடந்தது. இதில் படத்தில் நடித்த நடிகர்கள், வேலை செய்த தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட பலருக்கு படத்தின் நாயகன் சிரஞ்சீவி தனது உரையில் நன்றி சொன்னார்.

அப்போது விஜய் சேதுபதி பற்றி அவர் பேசுகையில், "விஜய் சேதுபதி பிஸியான நடிகர். இரவு பகலாக நடித்துக் கொண்டிருப்பவர். அவர் தேதிகள் கிடைக்க ஒரு தயாரிப்பாளருக்கு ஒன்றிரண்டு வருடங்கள் ஆகும். அப்படி இருக்கும் விஜய் சேதுபதி நாங்கள் கேட்டவுடன், சிரஞ்சிவீ சாரா, அவர் என் அண்ணன் மாதிரி என்று எனக்காக இந்தப் படத்தை ஒப்புக்கொண்டார். அவருக்கு உங்கள் முன்னால் மனப்பூர்வமாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.

முன்னதாக, படத்தில் விஜய்சேதுபதி வரும் காட்சிகள் அதிகம் இருப்பதாகவும், அதைக் குறைக்க தயாரிப்பு குழு முடிவு செய்தும், சிரஞ்சீவி தலையிட்டு அவற்றைக் குறைக்க வேண்டாம் என்று சொன்னதாகவும் செய்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x