Published : 21 Sep 2019 10:45 AM
Last Updated : 21 Sep 2019 10:45 AM

'சாம்பியன்' மூலம் பாடகராக அறிமுகமாகும் 'சரிகமப' கார்த்தி

சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ’சாம்பியன்’ படத்தின் மூலம் 'சரிகமப' நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான கார்த்தி பாடகராக அறிமுகமாகிறார்.

பாரதிராஜா, சசிகுமார், சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'கென்னடி கிளப்'. சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் போதிய வரவேற்பைப் பெறவில்லை. இந்தப் படத்துக்கு முன்பாகவே 'ஏஞ்சலினா' மற்றும் 'சாம்பியன்' ஆகிய படங்களை இயக்கி முடித்திருந்தார் சுசீந்திரன்.

தற்போது அதில் 'சாம்பியன்' முதலில் வெளியாகவுள்ளது. இதன் டீஸர் சமீபத்தில் இணையத்தில் வெளியிடப்பட்டது. விஸ்வா, மிருணாளினி, நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கால்பந்தாட்ட விளையாட்டை மையப்படுத்தி இதனை இயக்கியுள்ளார் சுசீந்திரன்.

இந்தப் படத்தில் கார்த்தி என்பவரை பாடகராக அறிமுகப்படுத்துகிறார் இயக்குநர் சுசீந்திரன். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'சரிகமப' நிகழ்ச்சியில் அனைவரது உள்ளத்தையும் கவர்ந்தவர் கார்த்தி. இவர் ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்டவர்.

அந்நிகழ்ச்சியில் இவரது பாடல்களுக்கு பல்வேறு திரையுலக பிரபலங்கள் தங்களுடைய வாழ்த்துகளைத் தெரிவித்து வந்தனர். திரையுலகில் பாடுவதற்கு முதல் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார் சுசீந்திரன். 'சாம்பியன்' படத்துக்காக அரோல் கொரேலி இசையில் உருவான பாடலைப் பாடியுள்ளார் கார்த்தி. இதற்கான பாடல் வரிகளை எழுதியுள்ளார் பாடலாசிரியர் விவேகா.

அக்டோபர் மாதம் இந்தப் படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டுக்குள் 'ஏஞ்சலினா' படத்தையும் திரைக்குக் கொண்டுவர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது படக்குழு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x