Published : 16 Sep 2019 05:42 PM
Last Updated : 16 Sep 2019 05:42 PM

கொரியன் படமான 'ப்ளைண்ட்' ரீமேக்கில் நயன்தாரா

கொரியன் படமான 'ப்ளைண்ட்' படத்தின் அதிகாரபூர்வ ரீமேக் தான் ’நெற்றிக்கண்' என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

'அவள்' படத்தின் இயக்குநரான மிலந்த் ராவ் இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கப்பட்டுள்ளது. ரவுடி பிக்சர்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி இந்தப் படத்தை தயாரித்து வருகிறார் விக்னேஷ் சிவன்.

நேற்று (செப்டம்பர் 16) தான் இதன் படப்பிடிப்பு பணிகள் துவங்கியது. கொரியன் படமான 'ப்ளைண்ட்' படத்தின் அதிகாரப்பூர்வமான ரீமேக் இது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. 2011-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

'ப்ளைண்ட்' படத்தின் கதை என்னவென்றால், இரண்டு வெவ்வேறு வழக்குகளில் பாதிக்கப்பட்டவர் ஒரே நபராக இருக்கிறார். காவல்துறை இந்த வழக்குகளுக்குச் சாட்சி இருக்கிறதா என்று தேடுகிறது. தேசிய காவல்துறை பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவி சூ-ஹா என்பவர் சாட்சி சொல்ல வருகிறார். ஆனால் ஒரு விபத்தில் தன் கண்பார்வையை இழந்தவர் சூ ஹா.

ஒரு கார் விபத்து வழக்கு பற்றிய முக்கியமான ஆதாரத்தை அவர் தருகிறார். சூ ஹா வின் மற்ற புலன்கள் அவருக்குக் கை கொடுக்கின்றன. திடீரென இன்னொரு சாட்சி, கி-சியாப் காவல்நிலையத்துக்கு வருகிறார். இவர் சம்பவத்தை நேரில் பார்த்தவர். இவர் சொல்வதும், சூ ஹா சொல்வது முற்றிலும் வெவ்வேறு விதமான சாட்சியாக இருக்கிறது. இதனால் வழக்கு விசாரணை திசை திரும்புகிறது. ஒரு வழக்கு, இரண்டு சாட்சிகள், இரண்டு விதமான வாக்குமூலங்கள். உண்மை எப்படி வெளியே வந்தது என்பதே கதை

இந்தக் கதைப்படிப் பார்த்தால், நயன்தாரா கண் தெரியாத காவல்துறை அதிகாரியாக நடிப்பது உறுதியாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x