Published : 16 Sep 2019 01:28 PM
Last Updated : 16 Sep 2019 01:28 PM

‘ஒத்த செருப்பு’ படத்தைப் பாராட்டிய வசந்த பாலன்

பார்த்திபன் இயக்கி, நடித்துள்ள ‘ஒத்த செருப்பு’ படத்தைப் பாராட்டியுள்ளார் இயக்குநர் வசந்த பாலன்.

பார்த்திபன் இயக்கி, தயாரித்து, நடித்துள்ள படம் ‘ஒத்த செருப்பு’. ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ரசூல் பூக்குட்டி இந்தப் படத்தின் ஒலி வடிவமைப்புப் பணிகளைச் செய்துள்ளார்.

எப்போதுமே தனது இயக்கத்தில் புதுமையைச் செய்யும் பார்த்திபன், இந்தப் படத்திலும் ஒரு புதுமையைச் செய்துள்ளார். படம் முழுவதும் பார்த்திபன் என்கிற ஒற்றைக் கதாபாத்திரம் மட்டுமே இடம்பெறும். மீதமுள்ள அனைத்துக் கதாபாத்திரங்களின் குரல்கள் மட்டுமே கேட்கும்.

இந்தப் படத்தைப் பார்த்த பல்வேறு திரையுலகப் பிரபலங்களும் பாராட்டி வருகின்றனர். சமீபத்தில் ரஜினியும் இந்தப் படத்தைப் பாராட்டினார். இந்நிலையில், இயக்குநர் வசந்த பாலனும் படத்தைப் பாராட்டி ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

“சில தினங்களுக்கு முன்பு இயக்குநர் ரா.பார்த்திபனின் அழைப்பின் பேரில் ‘ஒத்த செருப்பு’ திரைப்படத்தைக் கண்டேன். ஒருவரை மட்டும் வைத்துக்கொண்டு, ஒரு திரைப்படத்துக்கு திரைக்கதை எழுதுவது மற்றும் இயக்குவது மிகப்பெரிய சவால். அதை உலகமெங்கும் பல்வேறு திரை ஆளுமைகள் சாதித்துக் காட்டியுள்ளனர்.

பார்த்திபன் இதை எவ்வாறு கையாண்டுள்ளார் என்ற எதிர்பார்ப்பு, படவெளியீடு அறிவிப்பு வந்த நாளில் இருந்தே எனக்குள் ஒரு படைப்பாளியாய் அணையாமல் எரிந்து கொண்டிருந்தது. எனவே, அதிக ஆர்வத்துடன் படத்தைப் பார்த்தேன். ஒளி, ஒலி, எடிட்டிங், இசை, வசனம், மேக்கப் இப்படி பல தொழில்நுட்பங்களை மிக நுட்பமாகக் கையாண்ட திரைப்படமாக இந்தத் திரைப்படத்தை நான் உணர்ந்தேன்.

ஆழமான விசாரணைகளை, கேள்விகளை நமக்குள் உருவாக்குகிற திரைப்படமாகப் படம் விரிகிறது. சமகால அரசியலை, நடுத்தர வர்க்கனின் அன்றாட வாழ்க்கையை, பார்த்திபன் சாருக்கே உண்டான நையாண்டியுடன் படம் நெடுக வசனங்களை எழுதியுள்ளார், பேசியுள்ளார். பார்த்திபன் சாரின் வசன அமைப்பு, ஒரு கத்திக்குள் ஒரு குறும் கத்தி, அதற்குள் இன்னொரு சிறிய கத்தி, அதற்குள் இன்னும் ஒரு சின்னஞ்சிறிய கத்தியும் மயிலிறகுயும் இருக்கும். மிகக் கவனமாகப் படத்தைப் பார்க்கையில், கதையின் பல்வேறு படிமங்கள் வசனங்களில் உறைந்து கிடப்பதைக் காணலாம்.

பரீட்சார்த்த முயற்சிகள் எந்தவொரு துறைக்கும் அவசியமானது. அப்படி இந்தத் திரைப்படம், தமிழ்த் திரைப்படங்களில் ஒரு பெரிய முன்னெடுப்பு. வாழ்த்துகள் பார்த்திபன். பல உயரிய விருதுகள் உங்கள் வாசல் வரட்டும்” எனப் பாராட்டியுள்ளார் வசந்த பாலன்.

இந்தப் படம் வருகிற 20-ம் தேதி ரிலீஸாகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x