Published : 10 Sep 2019 07:09 PM
Last Updated : 10 Sep 2019 07:09 PM

தீபாவளிக்குப் பிறகு ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’ ரிலீஸ்?

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’ படம், தீபாவளிக்குப் பிறகு ரிலீஸ் ஆகலாம் எனத் தெரிகிறது.

கெளதம் மேனன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’. மேகா ஆகாஷ் ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில், சசிகுமார், வேல. ராமமூர்த்தி, சுனைனா, செந்தில் வீராசாமி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராணா டகுபதி கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார்.

தர்புகா சிவா இசையமைத்துள்ள இந்தப் படத்தின் பாடல்கள் ஏற்கெனவே வெளியாகி, வரவேற்பைப் பெற்றுள்ளன. கெளதம் மேனனின் ஒன்றாக என்டெர்டெயின்மென்ட் மற்றும் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் பி.மதன் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.

இந்தப் படம் தயாராகி நீண்ட நாட்களானாலும், ரிலீஸாகாமல் தள்ளிக்கொண்டே போகிறது. கடைசியாக கடந்த 6-ம் தேதி ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டது. ஆனாலும், வழக்கம்போல ரிலீஸ் தள்ளிப்போய் விட்டது.
கெளதம் மேனன் அடுத்ததாக சூர்யாவை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார். இந்தப் படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரிக்கிறார்.

எனவே, இந்தப் படத்தை இயக்குவதற்கான சம்பளத்தை முன்கூட்டியே வாங்கி, ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’ பணப் பிரச்சினையைத் தீர்த்து ரிலீஸ் செய்யவுள்ளார் கெளதம் மேனன். இதற்காக லண்டன் சென்றுள்ள அவர், இன்னும் சென்னை திரும்பவில்லை. எனவே, வருகிற வியாழக்கிழமையும் படம் ரிலீஸாக வாய்ப்பில்லை.

அதன்பிறகு, அக்டோபர் 4-ம் தேதி வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘அசுரன்’ படம் ரிலீஸாகவுள்ளது. அந்தப் படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகம் இருப்பதால், அதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்போ, பின்போ ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’ படம் ரிலீஸாக வாய்ப்பில்லை. எனவே, தீபாவளிக்குப் பிறகே படம் ரிலீஸாகும் என்கிறார்கள் தமிழ் சினிமாவைச் சேர்ந்தவர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x