Published : 09 Sep 2019 12:55 PM
Last Updated : 09 Sep 2019 12:55 PM

'நம்ம வீட்டுப் பிள்ளை' படப்பிடிப்பு நிறைவு: இறுதிக்கட்டப் பணிகள் தீவிரம்

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வந்த 'நம்ம வீட்டுப் பிள்ளை' படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஹீரோ' படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்புக்குப் பிறகு தொடங்கப்பட்ட படம் 'நம்ம வீட்டுப் பிள்ளை'. சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இந்தப் படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார். ஒரே கட்டமாக ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் முடிக்க வேண்டும் என்றே தொடங்கினார்கள்.

பாரதிராஜா, ஐஸ்வர்யா ராஜேஷ், அனு இம்மானுவேல், சமுத்திரக்கனி, சூரி, யோகி பாபு, நரேன், நட்ராஜ், ஆர்.கே.சுரேஷ், வேல.ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் சிவகார்த்திகேயனுடன் நடித்துள்ளனர். பல நடிகர்கள் நடிப்பதால் எப்படி ஒரே கட்டமாக முடிப்பது சாத்தியம் என்ற கேள்வி எழுந்தது.

ஆனால், படக்குழு வெற்றிகரமாக ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் முடித்துவிட்டது. இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் பாடல் ஒன்றைப் படமாக்கியது படக்குழு. அது முடிந்தவுடன், படப்பிடிப்பு நிறைவடைந்ததைக் கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளது. தற்போது இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இம்மாத இறுதியில் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். அதிகாரபூர்வ வெளியீட்டுத் தேதியை விரைவில் அறிவிக்கவுள்ளனர். இமான் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததைத் தொடர்ந்து, 'ஹீரோ' படத்தின் இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார் சிவகார்த்திகேயன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x