Published : 03 Sep 2019 04:16 PM
Last Updated : 03 Sep 2019 04:16 PM

மனதுக்குள் மொத்த படத்தையும் எடிட் செய்து வைத்திருந்தார்: கார்த்திக் நரேன் குறித்து அருண் விஜய்

'மாஃபியா' படத்தின் இயக்குநர் கார்த்திக் நரேன், அதன் முன்தயாரிப்பைக் கச்சிதமாகச் செய்திருந்தார் என்று நடிகர் அருண் விஜய் பாராட்டியுள்ளார்.

'துருவங்கள் பதினாறு' படத்தின் மூலம் பலரது கவனத்தை ஈர்த்தவர் கார்த்திக் நரேன். தொடர்ந்து 'நரகாசூரன்' என்ற படத்தை இயக்கி முடித்துவிட்டார். அவரே இந்தப் படத்தின் தயாரிப்பாளரும் கூட. மேலும், இந்தப் படத்தின் இணை தயாரிப்பாளராக கெளதம் மேனன் இணைந்தார். ஆனால், அவர்களுக்கு இடையில் ஏற்பட்ட பணப் பிரச்சினை காரணமாக படம் இன்னும் வெளியாகவில்லை.

இந்நிலையில், 'மாஃபியா 'என்ற படத்தைத் தொடங்கி, அதன் படப்பிடிப்பையும் கார்த்திக் நரேன் முடித்துவிட்டார். அருண் விஜய் இந்தப் படத்தின் நாயகன். 'நரகாசூரன்' தாமதமாவது குறித்து கார்த்திக் நரேன் - கெளதம் மேனன் இடையே சில மாதங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டு, பின்பு பிரச்சினை தீர்ந்தது.

கெளதம் மேனன் இயக்கத்தில் 'என்னை அறிந்தால்' படத்தில் வில்லனாக நடித்தவர் அருண் விஜய். ‘மாஃபியா’வில் நாயகனாக நடிக்கும்போது, இரண்டு இயக்குநர்களுக்கும் இருந்த பிரச்சினை பற்றி யோசித்தீர்களா? என்று கேட்டபோது, "கண்டிப்பா இல்லை. ஒரு கலைஞனாக கார்த்திக் நரேனின் வலி என்ன என்று எனக்குப் புரிந்தது. அவர் மிகத் திறமையானவர். அதை, ’துருவங்கள் பதினாறு’ படத்தில் நிரூபித்தார். அவர் என்னிடம் கதை சொல்ல வரும்போது, ‘நரகாசூரன்’ பிரச்சினைகள் பற்றி காட்டிக்கொள்ளவே இல்லை.

முழு நம்பிக்கை மற்றும் புத்துணர்வுடன் என்னிடம் கதை சொன்னார். அது எனக்குப் பிடித்தது. முழு படத்தையும் தன் மனதுக்குள் எடிட் செய்து, தயாராக வைத்திருந்தார். அவருக்கு இன்றும் கெளதம் மேனன் மீது அதிக மரியாதை இருக்கிறது" என்று கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x