Published : 25 Aug 2019 08:18 PM
Last Updated : 25 Aug 2019 08:18 PM

சத்தமின்றி தொடங்கப்பட்டுள்ள ஜெயம் ரவியின் புதிய படம்

அஹ்மத் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு அஸர்பைஜான் நாட்டில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

ப்ரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'கோமாளி'. இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்று, 30 கோடி வசூலைத் தாண்டியுள்ளது. இதன் மூலம் விநியோகஸ்தர்கள் மத்தியில் ஜெயம் ரவியின் படங்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

'கோமாளி' படத்துக்குப் பிறகு, லட்சுமண் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தி வந்தார் ஜெயம் ரவி. இது அவரது 25-வது படமாக உருவாகி வருகிறது. இந்நிலையில், தனது 26-வது படத்தைச் சத்தமின்றி தொடங்கியுள்ளார் ஜெயம் ரவி.

நீண்ட நாட்களாகப் பேச்சுவார்த்தையிலிருந்த அஹ்மத் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. 'ஜன கன மன' என்று தற்போதைக்கு பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு அஸர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது. முதன் முறையாக தாப்ஸி, ஜெயம் ரவிக்கு நாயகியாக நடித்து வருகிறார்.

முழுக்க ஆக்‌ஷன் பின்னணியில் உருவாகும் இந்தப் படம், பெரும் பொருட்செலவில் தயாராகி வருகிறது. இதன் முதற்கட்டப் படப்பிடிப்பை முடித்துவிட்டு, லட்சுமண் படத்தின் படப்பிடிப்பை முழுமையாக முடிக்கத் திட்டமிட்டுள்ளார் ஜெயம் ரவி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x