Published : 25 Aug 2019 07:51 PM
Last Updated : 25 Aug 2019 07:51 PM

வழக்கு தள்ளுபடி: ’பிகில்’ படக்குழு மகிழ்ச்சி

'பிகில்' படத்தின் கதை தன்னுடையது என்று தொடுத்த வழக்கை, செல்வா வாபஸ் பெற்றதால் படக்குழு மகிழ்ச்சியில் இருக்கிறது.

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'பிகில்'. ஏஜிஎஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வரும் இந்தப் படம் தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வரவுள்ளது. தற்போது இறுதிக்கட்ட பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது படக்குழு.

சில மாதங்களுக்கு முன்பு கே.பி.செல்வா என்பவர், 'பிகில்’ திரைப்படம் எழுத்தாளர்கள் சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட தனது கதையின் பதிப்புரிமையை மீறுவதாக வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் 'பிகில்' படப்பிடிப்புக்கும், திரையிடலுக்கும் தடை கோரியிருந்தார்.

இந்த வழக்கில் இயக்குநர் அட்லீ சார்பாக அவரது வழக்கறிஞர்கள் பி.வி. பாலசுப்பிரமணியம் மற்றும் சாரதா விவேக், மற்றும் தயாரிப்பாளர்கள் ஏஜிஎஸ் நிறுவனம் சார்பில் ஸ்ரீநாத் ஸ்ரீதேவன் எதிர்த்து வாதிட்டனர். இந்த வழக்குக்குக் காரணமே இல்லை என்று தள்ளுபடி செய்யக் கோரினார்கள். இயக்குநர் அட்லீ சார்பில் கடுமையான வாதங்களும் எடுத்து வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கே.பி.செல்வா வழக்கைத் திருப்பப் பெறுவதற்கு அனுமதி கோரியும், புதிதாக ஒரு வழக்குத் தொடுக்க உரிமை கேட்டும் விண்ணப்பம் ஒன்றைத் தாக்கல் செய்தார். வழக்கைத் திரும்பப் பெற அனுமதித்த நீதிமன்றம், இதே காரணத்தின் பெயரில் புதிய வழக்குத் தொடுப்பதற்கான உரிமையை மறுத்துவிட்டது.

இறுதியில் கே.பி.செல்வா வழக்கை வாபஸ் பெற்றதால் 'பிகில்' படக்குழு மகிழ்ச்சியடைந்துள்ளது. இதனால், படத்தின் மீது தற்போது எந்தவொரு பிரச்சினையுமே இல்லை.

'பிகில்' படத்தின் டப்பிங் பணிகளை முடித்துக் கொடுத்துவிட்டு, அடுத்து உருவாகவுள்ள 'தளபதி 64' படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் விஜய். அதனை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x