Published : 23 Aug 2019 07:44 PM
Last Updated : 23 Aug 2019 07:44 PM
ஷங்கர் இயக்கி வரும் 'இந்தியன் 2' படத்திலிருந்து ஐஸ்வர்யா ராஜேஷ் விலகியுள்ளார். அதற்கான காரணத்தையும் தெரிவித்துள்ளார்.
மீண்டும் கமல் - ஷங்கர் இணைப்பில் தொடங்கப்பட்ட படம் 'இந்தியன் 2'. லைகா நிறுவனம் சுமார் 200 கோடி பொருட்செலவில் தயாரித்து வருகிறது. சமீபத்தில் சித்தார்த் - ரகுல் ப்ரீத் சிங் சம்பந்தப்பட்ட காட்சிகளைப் படமாக்கினார்கள். இதில் சில காட்சிகளை முடித்துவிட்டு, வெளிநாட்டுக்கு ஓய்வுக்குச் சென்றுள்ளார் ரகுல் ப்ரீத் சிங். அங்கிருந்து திரும்பியவுடன் மீண்டும் 'இந்தியன் 2' படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளார்.
காஜல் அகர்வால், ப்ரியா பவானி சங்கர், சித்தார்த், நெடுமுடி வேணு, சமுத்திரக்கனி, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பலர் கமலுடன் நடிக்கவுள்ளனர். அனிருத் இசையமைக்க, ரத்னவேலு ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
இந்தப் படத்தில் முதலில் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால், படக்குழுவினர் கேட்ட தேதிகளை அவரால் ஒதுக்கித்தர இயலவில்லை. 'நம்ம வீட்டுப் பிள்ளை', 'வானம் கொட்டட்டும்', 'கருப்பர் நகரம்' உள்ளிட்ட சில தமிழ்ப் படங்களிலும், தெலுங்கு படங்களிலும் நடித்து வருவதே காரணம் எனக் கூறப்படுகிறது. இவர் நடிக்கவிருந்த கதாபாத்திரத்தில் தான் தற்போது ப்ரியா பவானி சங்கர் ஒப்பந்தமாகியுள்ளார்.
'இந்தியன் 2' படத்திலிருந்து விலகியிருப்பது குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ், "இயக்குநர் ஷங்கர் சார் படத்தில் நடிக்க வேண்டும் என்பது என் கனவு. ’இந்தியன் 2’ படத்தில் வாய்ப்பு வந்தது. ஆனால், கால்ஷீட் பிரச்சினைக் காரணமாக என்னால் நடிக்க முடியவில்லை. இப்போது அதே கதாபாத்திரத்தில் தான் ப்ரியா பவானி சங்கர் நடிக்கிறார்." என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT