Published : 22 Aug 2019 05:58 PM
Last Updated : 22 Aug 2019 05:58 PM

 இமாச்சலில் பனிச்சரிவில் சிக்கிய நடிகை மஞ்சு வாரியார்: 6 நாட்களுக்குப்பின் மீட்பு

இமாச்சலில் பிரேதேசத்தில் படப்பிடிப்பின்போது ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கிக் கொண்ட நடிகை மஞ்சு வாரியார் 6 நாட்களுக்குப்பின் மீட்கப்பட்டார். தான் மீண்டு வந்த அனுபவத்தை அவர் பகிர்ந்திருக்கிறார்.

கடந்த சில நாட்களாக இமாச்சலப் பிரதேசத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

அந்த மாநிலத்தில் கனமழை காரணமாக கடந்த இரு நாட்களில் மட்டும் 25 பேர் உயிரிழந்துள்ளனர். நிலச்சரிவு காரணமாக 500-க்கும் மேற்பட்டோர் பரிதவிக்கின்றனர். சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான சொத்துகள் சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் விமானப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் சத்ரா பகுதியில் ‘கயாட்டம்’ என்ற மலையாளப் படத்தின் படபிடிப்பு நடந்து வந்தது. இதில் பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடித்து வந்தார். இயக்குநர் சணல்குமார் சசிதரன் இயக்கும் இந்தப் படத்தின் காட்சிகள் இமாச்சலப் பிரதேசத்தில் படமாக்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில் அங்கு பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவில் மஞ்சுவாரியர் உட்பட மலையாளப் படப்பிடிப்புக் குழுவினரும் சிக்கிக் கொண்டனர். நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளதால் அந்தப் பகுதியில் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

தொலைபேசிகள் வேலை செய்யவில்லை. நடிகை மஞ்சுவாரியர், சணல் குமார் சசிதரன் உட்பட மொததம் 30 பேர் சிக்கிக் கொண்டதாகத் தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து சேட்டிலைட் தொலைபேசி மூலம் மஞ்சுவாரியர், தனது சகோதரரைத் தொடர்புகொண்டு நடந்த விவரங்களைக் கூறியுள்ளார். இதையடுத்து கேரளாவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் முரளிதரனுக்குத் தகவல் அளித்துள்ளார் அவரது சகோதரர். மத்திய அமைச்சர் உடனடியாக இமாச்சலப் பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாகூருக்குத் தகவல் அனுப்பினார்.

முதல்வர் உத்தரவின்பேரில் நிலச்சரிவில் சிக்கிக் கொண்ட மலையாள படக்குழுவினரை மீட்கும் பணியில் பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டனர். இந்நிலையில் மஞ்சு வாரியார் உட்பட கயாட்டம் படக் குழுவினர் அனைவரும் மீட்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தன்னுடைய இன்ஸ்டிராகிராம் பக்கத்தில் உணர்ச்சிபூர்வமாக தனக்கு ஏற்பட்ட திகில் அனுபவங்களை பதிவிட்டிருக்கிறார் மஞ்சு வாரியர்.

அதில், ”நான் உட்பட கயாட்டம் படக் குழுவினர் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டு நள்ளிரவு மணாலிக்கு கொண்டு வரப்பட்டோம். 6 நாட்கள் ஷியாகுரு பகுதியில் நிலச்சரிவில் சிக்கிக் கொண்ட பிறகு தற்போது நாங்கள் அனைவரும் பத்திரமாக இருக்கிறோம்.

எங்களை நலம் விசாரித்த அனைத்து உள்ளங்களின் அன்புக்கும், அக்கறைக்கும் நன்றி. கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தை அறிந்து அதிர்ச்சியுற்றேன். கடந்த வருடத்தை போல இந்த வருடமும் அனைவரும் ஒற்றுமையுடன் இருப்போம் என்று நம்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x