Published : 18 Aug 2019 12:21 PM
Last Updated : 18 Aug 2019 12:21 PM

’கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ எனக்கு பின்னடைவை ஏற்படுத்தி விட்டது - சர்ச்சையை கிளப்பிய ஜார்ஜ் ஆர்.ஆர். மார்ட்டின்

’கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ தொலைகாட்சி தொடர் தன்னுடைய புத்தகங்களை எழுதி முடிப்பதற்கு பெரும் பின்னடைவாக இருந்ததாக 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ புத்தகங்களின் ஆசிரியர் ஜார்ஜ் ஆர்.ஆர். மார்ட்டின் குற்றம் சாட்டியுள்ளார்.

1991-ம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த ஜார்ஜ் ஆர்.ஆர். மார்ட்டின் என்பவர் எழுதிய ‘A Song of Ice and Fire’ என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ டிவி தொடர். இத்தொடரின் முதல் எபிசோட், கடந்த 2011-ம் ஆண்டு வெளியானது. உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்ற இத்தொடர், 8வது சீசனோடு கடந்த மே மாதம் 20ஆம் தேதி நிறைவடைந்தது.

பரபரப்பும், எதிர்பாராத திருப்பங்களுடனும் எழுதப்பட்ட திரைக்கதையால், இத்தொடர் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை ஈர்த்தது. வெஸ்டரோஸ் எனப்படும் நிலப்பரப்பில் இருக்கும் 7 ராஜ்யங்களுக்கு இடையே நடக்கும் போர்தான் ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ தொடரின் மையக்கரு.

தொடங்கியது முதல் இறுதி சீசன் வரை பல சர்ச்சைகளை கிளப்பிய இத்தொடரின் மூலக்கதையின் ஆசிரியன் ஜார்ஜ் ஆர்.ஆர். மார்ட்டின் தற்போது ஒரு புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

“A Song of Ice and Fire” புத்தக வரிசையின் ஆறாவது அத்தியாயமான “The Winds of Winter“ என்ற புத்தகத்தை மார்ட்டின் தற்போது எழுதிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் ஒரு பேட்டியில் பேசிய அவர், ’கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ தொலைகாட்சி தொடர் எனக்கு சிறப்பாக இருந்ததாக நான் நினைக்கவில்லை. அது எனக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது’ என்று கூறியுள்ளார்.

இது குறித்து மேலும் அவர் கூறும்போது,

“ஒவ்வொரு நாளும் நான் எழுத அமரும்போது நான் மிகவும் குழப்பமாக உணர்கிறேன். புத்துகத்தை விரைவாக முடிக்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டுகிறேன். 40 பக்கங்கள் முடித்திருக்க வேண்டிய நேரத்தில் வெறும் 4 பக்கங்களே முடித்திருக்கிறேன். தொலைகாட்சி தொடரில் இருந்த சர்ச்சையான க்ளைமாக்ஸ் என் புத்தகத்தில் இருக்காது என்றும் ரசிகர்களுக்கு உறுதியளிக்கிறேன். புத்தகத்தை படிக்கும்போது அதை அவர்கள் தெரிந்து கொள்வார்கள்” என்று கூறியுள்ளார்.

’கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ கடைசி சீசனை புது இயக்குநர்களை வைத்து மீண்டும் எடுக்க வேண்டும் என்று ஏராளமான ரசிகர்கள் HBO நிறுவனத்துக்கு கோரிக்கை வைத்தது, ஒரு காட்சியில் கவனக்குறைவாக ஸ்டார்பக்ஸ் காபி கப் இடம்பெற்றது, திருப்தியளிக்காத க்ளைமாக்ஸ் என்ற ரசிகர்களின் புகார் ஆகிய சர்ச்சைகளை தொடர்ந்து ’கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ கதையின் மூலகர்த்தாவான ஜார்ஜ் ஆர்.ஆர். மார்ட்டினின் இந்த குற்றச்சாட்டு ’கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ ரசிகர்கள் மத்தியில் சூட்டை கிளப்பியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x