Published : 14 Aug 2019 07:45 PM
Last Updated : 14 Aug 2019 07:45 PM

கலைமாமணி விருதை புறக்கணித்தேனா? - யுகபாரதி விளக்கம்

கலைமாமணி விருது விழாவில் கலந்து கொள்ளாதது ஏன் என்று பாடலாசிரியர் யுகபாரதி விளக்கமளித்துள்ளார்.

முத்துக்குமரன் இயக்கத்தில் விமல், வரலட்சுமி, யோகி பாபு, ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கன்னிராசி'. நேற்று நடைபெற்ற இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசும் போது பாடலாசிரியர் யுகபாரதி, "நீங்கள் ஆகச்சிறந்த படம் எடுத்தாலும், இன்னும் 5 ஆண்டுகளுக்கு தேசிய விருதுகள் கிடைக்கப் போவதில்லை.

தேசிய விருது அறிவிப்பால் ஆனந்தம் கிடைக்கும் என்று எதிர்பார்த்த போது அதிர்ச்சியே கிடைத்தது. தமிழ் படங்கள் முக்கியமாக பிரதிநிதித்துவப்படவில்லை. கிருஷ்ணர், அர்ஜுனர் பற்றி பேசிக் கொண்டிருக்காமல், திரையுலகிற்கு நல்லது நடக்க வேண்டும் என்பதற்காக முக்கியமான நடிகர்கள், கலைஞர்கள் இது குறித்துப் பேசவேண்டும் என விரும்புகிறேன்" என்று கடுமையாகச் சாடினார்.

ஆனால், மாலையில் தமிழக அரசு சார்பில் நடைபெற்ற கலைமாமணி விருது விழாவில் யுகபாரதி கலந்து கொள்ளவில்லை. இதனால், அவருக்கு அறிவிக்கப்பட்ட விருதைப் புறக்கணித்துவிட்டார் என்று செய்திகள் வெளியானது.

இது தொடர்பாக பாடலாசிரியர் யுகபாரதியிடம் கேட்ட போது, "கலைமாமணி விருதை புறக்கணிக்கவில்லை. அந்த விழாவுக்குச் செல்லவில்லை. விழாவுக்கு செல்லாவிட்டால் விருதை புறக்கணிப்பதாக அர்த்தமில்லை. விழாவுக்கான அழைப்பிதழை வாங்கிக் கொள்ளச் சொன்னார்கள். அதை நான் வாங்கவில்லை. வெளியூரில் இருந்தேன். வேறு யாரையாவது வந்து வாங்கிக் கொள்ளச் சொல்லட்டுமா என்று கேட்டேன். இல்லை நீங்கள் தான் வந்து கையெழுத்திட்டு வாங்க வேண்டும் என்றார்கள்.

தமிழக அரசு சம்பந்தப்பட்ட விழா என்பதால், அழைப்பிதழ் மற்றும் அடையாள அட்டை இல்லாமல் உள்ளே செல்ல முடியாது. இது தான் உண்மையான காரணம். அதற்குள் நான் ஏதோ விருதை புறக்கணித்துவிட்டேன் என்றெல்லாம் செய்தியை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். அதில் உண்மையில்லை" என்று தெரிவித்தார் யுகபாரதி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x