Published : 13 Aug 2019 04:53 PM
Last Updated : 13 Aug 2019 04:53 PM

அமைதித் தூதுவரான நீங்கள் பாக். மீதான தாக்குதலை எப்படி ஆதரிக்கிறீர்கள்?- பிரியங்கா சோப்ராவை விமர்சித்த பாகிஸ்தான் பெண்

யுனிசெஃப் அமைதித் தூதுவரான நீங்கள் பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் தாக்குதலை ஆதரிக்கிறீர்களா? என்று பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவை பாகிஸ்தான் பெண் ஒருவர் விமர்சித்துள்ளார். இதற்கு தனது தரப்பிலிருந்து பக்குவமான பதிலை பிரியங்கா சோப்ரா வழங்கினார்.

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா சனிக்கிழமையன்று லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது பார்வையாளர்கள் பிரியங்கா சோப்ராவிடம் கேள்வி கேட்கும் சுற்று வந்தது.

அப்போது ஆயிஷா என்பவர் தன்னிடம் மைக் வந்தததும் பிரியங்கா சோப்ராவிடம், ''உங்களது அண்டை நாடான பாகிஸ்தானைச் சேர்ந்த எனக்கு, நீங்கள் மனிதத்தைப் பற்றி பேசுவதைக் கேட்பது கடினமாக இருக்கிறது. நீங்கள் சற்று போலியானவர் என்று எனக்குத் தெரியும்.

பிப்ரவரி 26 ஆம் தேதி ( பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்திய தினம்) உங்கள் ட்விட்டர் பக்கத்தில் இந்தியக் கொடியுடன் ஜெய்ஹிந்த் என்று பதிவிட்டீர்கள். யூனிசெஃப் அமைதித் தூதுவராக நீங்கள் இருக்கிறீர்கள்.

ஆனால், பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் அணு ஆயுதத் தாக்குதலை நீங்கள் ஆதரிக்கிறீர்கள். என்னைப் போன்ற லட்சக்கணக்கான பாகிஸ்தான் மக்கள் உங்கள் பாலிவுட் வணிகத்தை ஆதரிக்கிறார்கள்” என்று தொடர்ந்து பேசினார்.

அவரிடமிருந்து அதிகாரிகள் மைக்கைப் பிடுங்கினர். இதனைத் தொடர்ந்து பிரியங்கா பேசும்போது, “எனக்கு பாகிஸ்தானில் நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். இந்தியாவிலும் எனக்கு நண்பர்கள் இருக்கிறார்கள். போரை நான் விரும்புவது இல்லை. ஆனால் நான் தேசத்தின் மீது பற்று கொண்டவள்.

இருப்பினும் என்னை விரும்பும் பாகிஸ்தான மக்களை நான் காயப்படுத்தியிருந்தால் அதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நான் அனைவரும் இது தொடர்பாக மையத்தில் நின்று பேச வேண்டும் என்று நினைக்கிறேன். நீங்கள் சத்தம் போடாதீர்கள். நாம் இங்கு வந்திருப்பது அன்புக்காக. நீங்கள் உங்களையே சங்கடப்படுத்திக் கொள்கிறீர்கள். உங்களுடைய உற்சாகத்துக்கும், உங்கள் கேள்விக்கும், உங்கள் குரலுக்கும் நன்றி” என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x