Published : 13 Aug 2019 11:10 AM
Last Updated : 13 Aug 2019 11:10 AM

சினிமா என்னை ஒருபோதும் ஒதுக்காது: செப்டம்பரில் அடுத்த ஆட்டத்துக்கு தயாராகும் வடிவேலு

மகராசன் மோகன்

பலமான கூட்டணி, பிரம்மாண்ட கதைக்களம், மிரட்டும் ஃபர்ஸ்ட் லுக் என்று தனது புதிய திரைப்படம் பற்றிய அறிவிப்பை அடுத்த மாதம் வெளியிடத் தயாராகி வருகிறார் வடிவேலு.

‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ படத்தில் இருந்து முழுமையாக வெளியே வந்துள்ள நடிகர் வடிவேலு, அதுதொடர்பாக நடந்த பேச்சுவார்த்தைகள், சமரசங்கள், கருத்து வேறுபாடுகள் அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

‘‘நெசமாவே இம்சை அரசன்தான்ணே.. அது சம்பந்தமான பஞ்சாயத்து எல்லாம் முடிவுக்கு வந்திருச்சுன்ணே. இனி எந்த சூழ்நிலையிலும் அந்த படத்தை தொடப்போறதில்லை. அதப்பத்தி இனிமே பேசவே வேண்டாம்னு தோணுதுண்ணே’’ என்று கூறும் வடிவேலு, புது உற்சாகத்தோடு திரைக்களத்தில் அடுத்த ஆட்டத்துக்கு தயாராகி வருகிறார். அவருடன் உரையாடியதில் இருந்து..

‘‘சினிமாவுல நாம ஒரு விஷயம் செய்தாலும், நம்மளை தேடி வர்ற ஒரு விஷயத்தை தொட்டாலும் அது வழியா, என்னை ரசிக்கிற ஜனங்களுக்கு எவ்ளோ சந்தோஷம் கொடுக்க முடியும்னு தேடி, ஓடிட்டிருக்கிற ஆளு நானு. அதுக்கு பிரதிபலனா இன்னைக்கு இன்டெர்நெட்டு, செல்போனுன்னு புதுசு புதுசா கண்டுபிடிச்சிருக்குற கைப்பெட்டிக்குள்ள எல்லாம் நம்ம காமெடிங்க பரவிக் கிடக்குது.

இந்தமாதிரி சந்தோஷத்தை மக்களுக்கும் கொடுத்துட்டு, நாமளும் அது வழியே அனுபவிக்கிற சுகமே தனி! அந்த மாதிரி சில விஷயங்களை செய்யலாம்னு இருக்கும்போது இடையில சின்னச் சின்ன பிரச்சினைகளும் வரத்தான் செய்யுது. எவ்ளோதான் உஷாரா இருந்தாலும், ‘பொண்டாட்டி கைபட்டா குத்தம், கால்பட்டா குத்தம்’னு சொல்றது மாதிரி, சினிமாவுல சில பேர் நடந்துக்கிறாங்க. இதுக்கெல்லாம் நாம என்ன செய்ய முடியும்? அதனால, அதெல்லாத்தையும் தூக்கி ஓரம் கட்டிட்டேன்.

கொஞ்ச நாள் அமைதியா இருப்போம்னு நான்தான் நடிக்காம இருந் திட்டிருக்கேன். ஆனா, இந்த சினிமா என்னை ஒருபோதும் ஒதுக்கினதில்ல. ஒதுக்கவும் ஒதுக்காது. என்னை சார்ந்த எல்லோருக்கும் அது தெரியும். எனது அடுத்த பட வேலைகளை செப்டம்பர் இறுதியில அறிவிக்கப்போறேன். அந்த அறிவிப்பே ரொம்ப சுவாரஸ்யமா இருக்கும். அதை கேட்டாலே, ஜனங்க ஜாலியாகிடுவாங்க. வலுவான கூட்டணி, அசத்தலான கதைக்களம், மிரட்டுற ஃபர்ஸ்ட் லுக் என்று தாரை தப்பட்டைகள் கிழிஞ்சு தொங்கறமாதிரி பிச்சு உதறப்போறோம்ணே!’’ என்று கலகலப்போடு முடிக்கிறார் வடிவேலு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x