Published : 08 Aug 2019 02:57 PM
Last Updated : 08 Aug 2019 02:57 PM

முதலில் பாண்டிராஜ் படம்; பின்பு 'ஹீரோ': வேகமெடுக்கும் சிவகார்த்திகேயன்

பாண்டிராஜ் படத்தை முடித்துவிட்டு, 'ஹீரோ' படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பில் தீவிரமாகியுள்ளார் சிவகார்த்திகேயன்.

'mr.லோக்கல்' படத்துக்குப் பிறகு மித்ரன் இயக்கத்தில் உருவாகும் 'ஹீரோ' மற்றும் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் படம் என இரண்டிலும் கவனம் செலுத்தத் தொடங்கினார் சிவகார்த்திகேயன். இதில் மித்ரன் படம் தான் முதலில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.

'ஹீரோ' என்று பெயரிடப்பட்டுள்ள அந்தப் படத்தின் இரண்டு கட்டப் படப்பிடிப்புகளுக்குப் பிறகு, பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான படத்தில் கவனம் செலுத்தத் தொடங்கினார். எப்போதுமே தன் படத்தை சரியானபடி திட்டமிட்டு முடிக்கும் பாண்டிராஜ், சிவகார்த்திகேயன் படத்தின் பிரதான காட்சிகள் அனைத்தையும் முடித்துவிட்டார் என்கிறார்கள்.

இந்தப் படமும் சரஸ்வதி பூஜை விடுமுறையைக் கணக்கில் கொண்டு வெளியாகவுள்ளது. இதில் பாரதிராஜா, சமுத்திரக்கனி, ஆர்.கே.சுரேஷ், வேல.ராமமூர்த்தி, ஐஸ்வர்யா ராஜேஷ், அனு இம்மானுவேல், சூரி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து, மித்ரன் இயக்கத்தில் உருவாகும் 'ஹீரோ' படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார் சிவகார்த்திகேயன். டிசம்பர் 20-ம் தேதி இந்தப் படம் வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது. இதில் அர்ஜுன், அபிய் தியோல், கல்யாணி ப்ரியதர்ஷன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இவ்விரண்டு படங்களை முடித்துவிட்டு விக்னேஷ் சிவன், நெல்சன், ரவிக்குமார் ஆகியோரது இயக்கத்தில் உருவாகும் படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார் சிவகார்த்திகேயன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x