Published : 07 Aug 2019 04:24 PM
Last Updated : 07 Aug 2019 04:24 PM

‘தீக்குளித்து நிரூபிப்பேன்; அணைக்க மட்டும் ரசிகர்கள் போதும்’ -பார்த்திபன்

தீக்குளித்து நிரூபிப்பேன். அணைக்க மட்டும் ரசிகர்கள் போதும் என்று 'ஒத்த செருப்பு' படம் தொடர்பாக பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

பார்த்திபன் இயக்கி, தயாரித்து, நடித்துள்ள படம் 'ஒத்த செருப்பு'. ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ள படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ரசூல் பூக்குட்டி இந்தப் படத்தின் ஒலி வடிவமைப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். எப்போதுமே தனது இயக்கத்தில் புதுமையைச் செய்யும் பார்த்திபன், இந்தப் படத்திலும் புதுமையைச் செய்துள்ளார்.

படத்தில் என்ன விசேஷம் என்றால், படம் முழுவதும் பார்த்திபன் என்கிற ஒற்றைக் கதாபாத்திரம் மட்டுமே இடம்பெறும். மீதமுள்ள அனைத்துக் கதாபாத்திரங்களின் குரல்கள் மட்டுமே கேட்கும். இந்தப் புதுமையான முயற்சியை இந்தி நடிகர் ஆமிர் கான், ரஜினி, யாஷ் உள்ளிட்ட பலரும் பாராட்டியிருந்தார்கள்.

தற்போது இந்தப் படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்துவிட்டதால், ஆகஸ்ட் 30-ம் தேதி வெளியீடு என அறிவித்துள்ளார் பார்த்திபன். வியாபார ரீதியில் இந்தப் படம் எப்படி இருக்கும் என்ற பேச்சுவார்த்தை எழுந்தது. இதனை முன்வைத்து பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "#OS7 அணைப்பிற்கு அழைப்பு. ரசிகர்களின் அரவணைப்பிற்கு, நான் என்னையும் ரசிகர்களையும் தான் நம்புகிறேன். ஆனால், சினிமா வியாபாரம் 'ஒத்த செருப்பு' போன்ற புத்தம் புதிய முயற்சிகளை (நியாயமான) சந்தேகப் பார்வையுடனே பார்க்கிறார்கள். தீக்குளித்து நிரூபிப்பேன். அணைக்க மட்டும் ரசிகர்கள் போதும்" என்று தெரிவித்துள்ளார் பார்த்திபன்.

'ஒத்த செருப்பு' பணிகள் முடிந்துவிட்டதால், 'பொன்னியின் செல்வன்', 'துக்ளக் தர்பார்' என அடுத்து நடிப்பில் கவனம் செலுத்தவுள்ளார் பார்த்திபன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x