Published : 02 Aug 2019 05:13 PM
Last Updated : 02 Aug 2019 05:13 PM

விஜய் சேதுபதிக்கு நாயகியாக அதிதி ராவ் ஒப்பந்தம்

விஜய் சேதுபதி நடிக்கவுள்ள 'துக்ளக் தர்பார்' படத்தின் நாயகியாக அதிதி ராவ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

'சிந்துபாத்' படத்தைத் தொடர்ந்து 'சங்கத்தமிழன்' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் விஜய் சேதுபதி. இதன் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழில் 'கடைசி விவசாயி', 'லாபம்', 'மாமனிதன்' ஆகிய படங்களிலும், தெலுங்கில் 'சைரா' ஆகிய படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார் விஜய் சேதுபதி.

இந்தப் படங்களைத் தொடர்ந்து தில்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் விஜய் சேதுபதி. லலித் குமார் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பார்த்திபன் நடிக்கவுள்ளார். மேலும், இதன் நாயகியாக அதிதி ராவ் ஒப்பந்தமாகியுள்ளார்.

'செக்கச்சிவந்த வானம்' படத்தில் அதிதி ராவ்வுடன் இணைந்து நடித்துள்ளார் விஜய் சேதுபதி. ஆனால், அவருக்கு நாயகியாக நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 'துக்ளக் தர்பார்' படத்தில் இருவரும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, 'துக்ளக் தர்பார்' படப்பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு பணிகள் நாளை (ஆகஸ்ட் 3) துவங்கவுள்ளது. தொழில்நுட்பக் கலைஞர்கள் யார் என்பது நாளை (ஆகஸ்ட் 3) படக்குழு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வழக்கமாக நடிக்கும் படங்களுக்கு இடையே, முத்தையா முரளிதரன் பயோப்பிக்கில் நடிப்பதற்கும் ஆயத்தமாக திட்டமிட்டுள்ளார் விஜய் சேதுபதி. இதன் படப்பிடிப்பு இந்தாண்டு இறுதியில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x