Published : 27 Jul 2019 06:09 PM
Last Updated : 27 Jul 2019 06:09 PM

சினிமா எனக்குக் கொடுத்த பெரிய பரிசு: ஜாம்பவான்களுடன் நடித்தது குறித்து ஜோதிகா நெகிழ்ச்சி

'ஜாக்பாட்' இசை வெளியீட்டு விழாவில் சூர்யா மற்றும் ஜோதிகா

சூர்யா கொடுத்த ஊக்கம், பரிசு என 'ஜாக்பாட்' இசை வெளியீட்டு விழாவில் ஜோதிகா உற்சாகமாகப் பகிர்ந்து கொண்டார்.

கல்யாண் இயக்கத்தில் ஜோதிகா, ரேவதி, 'நான் கடவுள்' ராஜேந்திரன், மன்சூர் அலிகான், ஆனந்தராஜ், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'ஜாக்பாட்'. சூர்யா தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். ஆகஸ்ட் 2-ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று (ஜூலை 27) நடைபெற்றது.

இவ்விழாவில் படக்குழுவினருடன் இணைந்து சூர்யா, சிவகுமார், ஜோதிகாவின் தாயார் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் ஜோதிகா பேசும் போது, “சிவகுமார் அப்பாவுக்கு முன்னால் தமிழில் பேசவே பயமாக இருக்கிறது. அவர் தான் தினமும் படப்பிடிப்புக்கு ரொம்ப பாசிட்டிவாக அனுப்புவார். அவருக்கு நன்றி. இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு 2டி நிறுவனத்தில் ஒரு படம் பண்ணியிருக்கிறேன். ரொம்பப் புதுமையான கதைக்களம். இதுவரை இப்படியொரு கதையில் நடித்ததில்லை. 

சில சமயம் வீட்டுக்கு வந்தவுடன், 'இது சரியா' என்று யோசிப்பேன். ரொம்ப ஷாக்கிங்கான முக பாவனைகள், ஆக்‌ஷன் காட்சிகள் பண்ணியிருக்கோம். இயக்குநர் கல்யாண் சாருக்கு நன்றி. ரேவதி மேடத்தின் அனுபவம் மிகப்பெரியது. அனைத்து மொழிப் படங்களிலும் நடித்திருக்கிறார். நாடகங்கள், படம் இயக்கம் என அனைத்துமே பண்ணியிருக்கிறார். அவரோடு இணைந்து நடித்ததே ஒரு பெரிய சாதனையாக உணர்கிறேன். 

நாயகிகள் இதுவரை எதெல்லாம் பண்ணவில்லையோ, அதெல்லாம் இதில் பண்ண வேண்டும் என்ற எண்ணத்தில் கல்யாண் சார் இந்தக் கதையை எழுதவில்லை. நடிகர்கள் என்ன பண்ணுவார்களோ, அதை இந்த இரண்டு பெண்களை வைத்து பண்ணப் போகிறேன் என்று இந்தக் கதையை எழுதியிருக்கிறார். நதியில் குதிப்பது, பாலத்திலிருந்து குதிப்பது, மழை பெய்யும் போது சண்டை என விடவே இல்லை. 

நிறைய வலுவான கதாபாத்திரங்களில் நடித்துள்ளேன். ஆனால், இந்தப் படத்தில் நடித்தது ரொம்பவே பவர் ஃபுல்லாக இருந்தது. இரண்டு குழந்தைகளுக்கு அம்மா என்பதை மறந்து, அனைத்து விதமான சண்டைக் காட்சிகளும் வைத்துவிட்டார்கள். அவர்கள் என் மீது வைத்த நம்பிக்கையால், தயக்கமின்றி நடித்துள்ளேன். பிருந்தா மாஸ்டர் இந்தப் படத்தின் 2 பாடல்களை 3 நாட்களில் முடித்துக் கொடுத்தார் அவருக்கு நன்றி. ஏனென்றால் நிறைய ஆண் டான்ஸ் மாஸ்டர்களுடன் பணிபுரிந்திருக்கிறேன். அவர்கள் ஒரு பாடலை முடிக்க 3 நாட்கள் எடுத்துக் கொள்வார்கள். அது தான் வுமன் பவர். 

இந்தப் படத்தில் நடித்த போது மறக்க முடியாதது என்னவென்றால், சூர்யா எனக்கொரு ஆக்‌ஷன் கிட் வாங்கிக் கொடுத்தார். இனிமேல் இது உனக்குத் தேவைப்படும் என்றார். ஒரு ஆக்‌ஷன் ஹீரோ எனக்காக வாங்கிக் கொடுத்தார். அவர் கொடுத்த உந்துதலால் மட்டுமே இங்கு நின்று கொண்டிருக்கிறேன். அவர் தான் எனக்கு முழுமையான பலம். 

நிறைய பேர் சிவாஜி சாருடன் பத்மினி மேடம் நிறைய படங்களில் நடித்தார் என்று சொல்வார்கள். இப்படி நிறைய காம்பினேஷன் சொல்வார்கள். சூர்யா, விக்ரம், அஜித், விஜய் என அனைவருடனும் இவர் மட்டுமே நாயகியாக நடித்தார் என்பார்கள். எப்போதுமே நாயகியை மட்டும் நிறைய ஹீரோக்கள் படங்களில் நடித்ததாகச் சொல்வார்கள். ஆனால், இன்று என்னால் பெருமையாகச் சொல்லிக்கொள்ள முடியும். என்னவென்றால், நான் மட்டுமே ஊர்வசி, பானுப்ரியா, சரண்யா பொன்வண்ணன், ரேவதி, செளகார் ஜானகி மேடம், சச்சு மேடம் என நிறைய ஜாம்பவான் நடிகைகளுடன் இணைந்து நடித்திருக்கிறேன். இது சினிமா எனக்குக் கொடுத்த பெரிய பரிசாக பார்க்கிறேன். 

என்னுடைய ஜாக்பாட் கண்டிப்பாக என் கணவர் தான். எதுவுமே சூர்யா இல்லாமல் என்னால் பண்ண முடியாது. எனக்கு அவ்வளவு பயிற்சி கொடுத்திருக்கார். நான் வீட்டில் வேலை செய்வதாக பலரும் சொல்கிறார்கள். ஆனால், நிஜமாகவே சூர்யாவும் வீட்டில் வேலை செய்வார். நான் ஷூட்டிங் சென்றுவிட்டால் குழந்தைகளுக்குச் சாப்பாடு ஊட்டுவது, பள்ளிக்கு அனுப்புவது தாண்டி நிறைய செய்வார். இங்குள்ள அப்பாக்களுக்கு என்ன வேலை என்று தெரியும்” என்று பேசினார் ஜோதிகா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x