Published : 19 Jul 2019 07:08 PM
Last Updated : 19 Jul 2019 07:08 PM
அமலா பாலின் தீவிர முயற்சி மற்றும் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, மாலை காட்சியிலிருந்து வெளியாகியுள்ளது 'ஆடை'
‘மேயாத மான்’ படத்தைத் தொடர்ந்து ரத்னகுமார் இயக்கியுள்ள படம் ‘ஆடை’. நாயகியை மையப்படுத்திய இந்தக் கதையில், பிரதான பாத்திரத்தில் அமலா பால் நடித்துள்ளார். வி.ஜே.ரம்யா, விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படம் இன்று (ஜுலை 19) வெளியாகவிருந்தது.
ஆனால், படத்துக்கு வாங்கப்பட்ட பைனான்ஸில் சிக்கல் ஏற்பட்டதால் திட்டமிட்டப்படி காலை வெளியாகவில்லை. இதனால் விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் உள்ளிட்ட பலரும் ஏமாற்றமடைந்தனர். நேற்றிரவு (ஜுலை 18) முதலே இந்தப் படத்தின் பைனான்ஸ் பிரச்சினை தொடர்பாக தயாரிப்பாளர் மற்றும் பைனாஸியர்களிடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.
களமிறங்கிய அமலா பால்
இந்தப் படத்தின் பேச்சுவார்த்தை தொடங்கியவுடனே, அமலா பாலின் சம்பளப் பேச்சுவார்த்தையைத் தான் முதலில் பேசினார்கள். இதனைத் தெரிந்து கொண்ட அமலா பால் தனக்கு வர வேண்டிய சம்பள பாக்கி தேவையில்லை, படத்தை வெளியிடலாம் என்று கூறிவிட்டார். அடுத்ததாக பைனான்ஸியர்களுடனான பேச்சுவார்த்தை தொடங்கியது. நள்ளிரவு வரை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டவில்லை. இதனால் காலை காட்சி வெளியாகாமல் போனது.
நேரடிப் பேச்சுவார்த்தையில் அமலா பால்
காலையில் படம் வெளியாகவில்லை என்றவுடன் அமலா பால், நேரடியா ஜெமினி லேப் சென்றுள்ளார். அங்கு தான் தயாரிப்பாளர் - பைனாஸியர்கள் இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. அப்பேச்சுவார்த்தையில் அமலா பால் கலந்து கொண்டு சுமுக முடிவு எட்டும்வரை உடனிருந்து முடித்திருக்கிறார். மாலை 5 மணிக்கு பேச்சுவார்த்தை முடிந்தவுடன் தான் ஜெமினி லேப்பிலிருந்து கிளம்பியுள்ளார்.
தற்போது பைனான்ஸ் பிரச்சினை அனைத்துமே தீர்க்கப்பட்டு, லேப் கிளியரன்ஸ் கொடுக்கப்பட்டுவிட்டது. இதனால் அனைத்து திரையரங்குகளுக்கும் க்யூப் கீ எனப்படும் பாஸ்வோர்டு அனுப்பும் பணிகள் மும்முரமாக தொடங்கப்பட்டுள்ளது. அமலா பாலின் இந்த முயற்சிக்கு தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், பைனான்சியர்கள் உள்ளிட்ட அனைவருமே பாராட்டு தெரிவித்துள்ளனர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT