Published : 26 May 2015 05:26 PM
Last Updated : 26 May 2015 05:26 PM

ரஜினிக்கு லிங்கா விநியோகஸ்தர்கள் புதிய கோரிக்கை

ரஜினி வேந்தர் மூவீஸ் நிறுவனத்துக்கு கொடுத்த வாக்குறுதிப்படி கால்ஷீட் தரவேண்டும். அப்படி நடந்தால் மட்டுமே MG அடிப்படையில் படம் திரையிட்டவர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் இழப்பீடு கிடைக்கும் என்று 'லிங்கா' பட விநியோகஸ்தர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

'லிங்கா' படத்தின் நஷ்ட ஈடு குறித்த பிரச்சினை இன்னும் தீராத சிக்கலில் நீடித்து வருகிறது. இந்நிலையில், விநியோகஸ்தர்கள் தரப்பினர் இன்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

இதுகுறித்து விநியோகஸ்தர்கள் தரப்பில் இன்று வெளியிட்ட அறிக்கையில், '' 'லிங்கா' திரைப்படம் வாங்கி வெளியிட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் பெரும் நஷ்டத்தை ஈடுகட்ட வேண்டி பலகட்ட போராட்டங்களை நடத்திய பின்னர், தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம் இணைந்து 'லிங்கா' பட விநியோகஸ்தர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியது.

33.50 கோடி நஷ்டத்தை ஈடுகட்ட முடியாது. 10 கோடி மட்டுமே தரமுடியும் என கூறினார்கள். இதற்கிடையில் விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் பிச்சை எடுக்கும் போராட்டத்தை அறிவித்தனர்.

ரஜினி சார்பில் இப்பிரச்சினையில் தலையிட்டு கணக்கு வாங்கிய திருப்பூர் சுப்பிரமணியம், ''12.50 கோடி தருகிறோம். ரஜினி சார் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். தற்போது 12.50 கோடியை வாங்கிக் கொள்ளுங்கள். பாக்கியுள்ள நஷ்டத்தை ஈடுகட்ட வேந்தர் மூவீஸ் தயாரிக்கும் படத்துக்கு ரஜினி குறைந்த நாட்கள் கால்ஷீட் கொடுப்பார். அப்படத்தில் கிடைக்கும் லாபத்தை வைத்து எஞ்சிய நஷ்டத்தை ஈடுகட்டிக் கொள்ளுங்கள்'' என்றார் திருப்பூர் சுப்பிரமணியம்.

நாங்களும் நம்பி 12.50 கோடி பணத்தை பெற்றுக்கொள்ள சம்மதித்தோம். மீடியா முன் 'லிங்கா' நஷ்ட ஈடு முடிவுக்கு வந்தது என நாங்கள் அறிவித்தோம்.

திருச்சி ஏரியா -1.39 கோடி, நெல்லை ஏரியா - 80 லட்சம், செங்கல்பட்டு - 2.30 கோடி, மதுரை ஏரியா - 1.40 கோடி என மொத்தம் 5 கோடியே 89 லட்சம் மட்டும் கொடுக்கப்பட்டது. எஞ்சிய தொகை 6 கோடியே 61 லட்சம் இன்றுவரை கொடுக்கப்படவில்லை.

பணத்தை தாணுவிடம் கேட்டால், ''திருப்பூர் சுப்பிரமணியனிடம் இருக்கிறது'' என்கிறார். ஒரு கட்டத்தில், ''பணமெல்லாம் இல்லை'' என்கிறார் திருப்பூர் சுப்பிரமணியம்.

சங்கம் தலையிட்டு பேசி முடிக்கப்பட்ட இவ்விஷயத்தில் நாங்கள் நம்பவைத்து ஏமாற்றப்பட்டதாக கருதுகிறோம். ரஜினியின் தூதராக செயல்பட்ட திருப்பூர் சுப்பிரமணியம் முன்னுக்கு பின் முரணாக பேசுகிறார். உண்மையிலேயே திருப்பூர் சுப்பிரமணியம் ரஜினியின் தூதுவர்தானா?

இனியும் பொறுமை காக்கும் நிலையில் இல்லை. ரஜினி சார்பில் கொடுக்கப்பட்ட 12.50 கோடி முழுமையாக சம்பந்தப்பட்ட 'லிங்கா ' பட விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்களிடம் இடைத்தரகர் தலையீடு இன்றி உடனடியாக வழங்கப்பட வேண்டும்.

'லிங்கா' பட வெளியீட்டின்போது விநியோகஸ்தர்கள் பாக்கி தொகைக்கு ஈடாக கொடுத்த காசோலை சம்பந்தமாக வேந்தர் மூவீஸ் தற்போது வழக்கு தொடர்ந்துள்ளது.

12.50 கோடிக்கு ஒப்புக்கொண்டபோது விநியோகஸ்தர்கள் மீது வேந்தர் மூவீஸ், தியேட்டர்காரர்கள் எப்பிரச்சினையும் கிளப்பமாட்டார்கள் என கொடுக்கப்பட்ட வாக்குறுதி மீறப்பட்டுள்ளது.

MG (மினிமம் கியாரண்டி) அடிப்படையில் திரையிட்ட தியேட்டர்காரர்கள் நஷ்டத்தை ஈடுகட்ட ரஜினி வேந்தர் மூவீஸ் நிறுவனத்துக்கு கொடுத்த வாக்குறுதிப்படி கால்ஷீட் தரவேண்டும். அப்படி நடந்தால் மட்டுமே MG அடிப்படையில் படம் திரையிட்டவர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் இழப்பீடு கிடைக்கும்.

எனவே, அடுத்தகட்ட நடவடிக்கை சம்பந்தமாக ஆலோசித்து முடிவெடுக்க 'லிங்கா' படத்தை MG அடிப்படையில் திரையிட்ட தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்களின் கூட்டுக் கூட்டம் அடுத்த வாரம் சென்னையில் நடைபெற உள்ளது. அக்கூட்டத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை சம்பந்தமாக முடிவெடுக்கப்படும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x