Published : 28 Apr 2015 02:21 PM
Last Updated : 28 Apr 2015 02:21 PM

நேபாள நிதி உதவிகளை தவறாகப் பயன்படுத்தாதீர்: மனிஷா கொய்ராலா வேண்டுகோள்

நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் நேபாளத்துக்கு வழங்கப்படும் நிதி உதவிகளை தன்னார்வு அமைப்புகள் தவறாக பயன்படுத்தி பயனடைவதை தவிர்க்க வேண்டும் என்று மனிஷா கொய்ராலா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த 25-ம் தேதி காலை நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அலகில் 7.9 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் தலைநகர் காத்மாண்டு உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் பேரழிவைச் சந்தித்துள்ளன.

நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,347 ஆக உள்ளது. காயமடைந்தோர் எண்ணிக்கை 7,500-க்கும் அதிகமாக உள்ளது. நேபாளத்துக்கு பல நாடுகள் உதவிக்கரம் அளித்து வருகிறது. பல தன்னார்வு அமைப்புகள் அங்கு உதவிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், பிரபல இந்தி நடிகையும், நேபாள நாட்டில் நான்கு முறை பிரதமராக இருந்த கிரிஜா பிரசாத் கொய்ராலாவின் பேத்தியுமான மனிஷா கொய்ராலா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறும்போது, " நிறைய தன்னார்வு அமைப்புகளை நான் தொடர்ந்து கண்டித்து வருகிறேன்.

அவர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வரும் உதவிகளை நிவாரண பொருட்களை தவறாக பயன்படுத்துகின்றனர். வெளிநாடுகள் மற்றும் பிற மக்களிடமிருந்து வரும் நிதி உதவிகளை அதிகாரிகள் சரி பார்க்க வேண்டும். இது தொடர்பாக ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு வரும் உதவிகளை தவறாக பயன்படுத்துவோர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இங்கு நிலைமை மிக மோசமாக உள்ளது. மறுவாழ்வு ஏற்படுத்தி தர நீண்ட காலம் ஆகும் என்று தோன்றுகிறது. அதனால் அதற்கு நாம் தயாராக வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உதவி அளித்த பிரதமர் மோடிக்கு நன்றி

மேலும், நேபாளுக்கு முதன்மையாக உதவிக் கரம் அளித்த இந்தியாவுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடியின் ட்விட்டர் பக்கத்தில் அவர், " நேபாளத்தில் பேரழிவை இந்த நில நடுக்கம் ஏற்படுத்திவிட்டது. நீங்கள் முதன்மையாக உதவி அளித்து பக்க பலமாக இருந்துள்ளீர்கள். மிக்க நன்றி" என்று குறிப்பிட்டிருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x