Published : 15 Apr 2015 09:58 AM
Last Updated : 15 Apr 2015 09:58 AM

திராவிடர் கழகம் - சிவசேனா கட்சியினர் மோதல்

சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் தாலி அகற்றும் நிகழ்ச்சி நேற்று நடத்தப்பட்டது. இதற்கு பல்வேறு இந்து அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. நேற்று மாலை 3 மணியளவில் சிவசேனா கட்சியை சேர்ந்த சிலர் பெரியார் திடலை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது தி.க. தொண்டர்களுக்கும், சிவசேனா கட்சியினருக்கும் மோதல் ஏற்பட்டது.

பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இந்த மோதலில் தி.க., சிவசேனா கட்சியை சேர்ந்த 13 பேர் காயம் அடைந்தனர். மோதல் சம்பவம் தொடர்பாக வேப்பேரி போலீஸார் இரு தரப்பை சேர்ந்தவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாலி அகற்றும் நிகழ்ச்சிக்கு சென்னை உயர் நீதிமன்றம் நேற்று காலையில் திடீரென தடை விதித்தது. இதனைக் கொண்டாடும் வகையில் இந்து மகாசபை அமைப்பை சேர்ந்தவர்கள் அடையாறில் உள்ள கி.வீரமணி வீட்டின் முன்பு பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினர். போலீஸ் தடையை மீறி செயல்பட்டதால் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கி.வீரமணியை கண்டித்து புரசைவாக்கம் டவுட்டன் பாலம் அருகே பாரத் இந்து முன்னணியினரும், கெல்லீஸ் சிக்னலில் இந்து சத்ய சேனா அமைப்பினரும் மறியலில் ஈடுபட் டனர். அவர்களையும் போலீஸார் கைது செய்தனர்.

எச்.ராஜா கண்டனம்

தாலி அகற்றும் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து எழும்பூர் தாளமுத்து நடராஜன் மாளிகை அருகே இந்து முன்னணி அமைப்பினர் நேற்று காலை மறியல் போராட்டத்தில் ஈடுபட வந்தனர். பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜாவும் வந்திருந்தார். தாலி அகற்றும் நிகழ்ச்சிக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்ததால் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இது குறித்து ‘தி இந்து’விடம் பேசிய எச்.ராஜா, ‘‘பெரியார் திடலில் நடந்த தாலி அகற்றும் நிகழ்ச்சியில் பொதுமக்கள் யாரும் பங்கேற்கவில்லை. உயர் நீதிமன்ற தடைக்கு பயந்து ரகசியமாக காலை 7 மணிக்கே தாலி அகற்றி யுள்ளனர். இதுபோன்ற நிகழ்ச்சி களை பாஜக தொடர்ந்து எதிர்க் கும்’’ என்றார்.

அவமானப்படுத்துவதா?

சிவசேனா கட்சியினர் தங்கள் போராட்டம் பற்றி கூறும்போது, “எல்லா மதங்களிலும் பல்வேறு கலாச்சார சம்பிரதாய சடங்குகள் உள்ளன. மற்ற மத சடங்குகள் எதையும் திராவிடர் கழகத்தினர் கேள்வி கேட்பதில்லை. இந்து மத சடங்குகளை எதிர்த்து மட்டுமே இவர்கள் போராட்டங்கள் நடத்துகின்றனர்.

இவர்களின் நடவடிக்கைகள் யாவும் இந்து மத மக்களின் உணர்வுகளை புண்படுத்து வதாக உள்ளன” என்று தெரிவித் தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x