Published : 03 Mar 2015 03:41 PM
Last Updated : 03 Mar 2015 03:41 PM

எதையாவது பேசி கெடுக்காதீர்கள்: சிவகார்த்திகேயன் உடன் தனுஷ் கோரிக்கை

'அண்ணன் தம்பியாக சந்தோஷமாக இருக்கிறோம், ஏதாவது பேசி கெடுத்து விடவேண்டாம்' என்று சிவகார்த்திகேயன் குறித்து தனுஷ் கூறியுள்ளார்.

தனுஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'காக்கி சட்டை' திரைப்படம் வெளியாகி வசூல் ரீதியில் வரவேற்பை பெற்றிருக்கிறது. அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது.

தனுஷ் - சிவகார்த்திகேயன் இருவருக்கும் மோதல், சிவகார்த்திகேயனைப் பார்த்தவுடன் தனுஷ் எழுந்து போய்விட்டார் என்று செய்திகள் வெளியாகின. இதற்கு எங்களுக்குள் அப்படி எதுவும் இல்லை என்று சிவகார்த்திகேயன் பதிலளித்தாலும், தனுஷ் எதுவும் பேசவில்லை.

இந்நிலையில், 'காக்கி சட்டை' படத்தை விளம்பரப்படுத்தும் விதமாக டிவி சேனல் ஒன்றில் நேரலை ஒளிபரப்பு நடைபெற்றது. அதில் இயக்குநர் துரை.செந்தில்குமார் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

அந்நிகழ்ச்சிக்கு போன் செய்த தனுஷ், சிவகார்த்திகேயனிடம் பேசினார். அப்போது "லைனில் வந்ததில் நிறைய நல்ல விஷயங்கள் இருக்கு சார்" என்று சிவகார்த்திகேயன் கூறினார். அதற்கு தனுஷ் "வழக்கமான கேள்வி எல்லாம் கேட்டு விட்டார்களா? உங்களுக்கும் அவருக்கும் பிரச்சினையாமே என்றெல்லாம்" என்றார். "ஆமாம் சார்.." என்றார் சிவகார்த்திகேயன்.

"யப்பா... அண்ணன் தம்பியா சந்தோஷமாக இருக்கிறோம். நீங்களா ஏதாவது பேசி கெடுத்து விட்டுறாதீங்க" என்று கூறினார் தனுஷ். "நீங்க போன் பண்ணியதில் நான் தப்பித்து விட்டேன்" என்று பதிலளித்தார் சிவகார்த்திகேயன்.

"சிவகார்த்திகேயன் தான் தற்போது எல்லோருக்கும் படம் கொடுக்க வேண்டும். 'எதிர் நீச்சல்' நாங்க பண்ணினோம். அது முடிந்தவுடன் என்னோட பேனருக்கு சிவா பண்ணிய படம் தான் 'காக்கி சட்டை'. '3' படத்தில் இருந்தே அவருடைய நடிப்பு எனக்கு பிடித்திருந்தது. அதனால் தான் அவர் மீது ஈடுபாடு கொண்டு வாய்ப்பு கொடுத்தேன். எல்லோரும் ஆச்சர்யப்படும் வகையில் அவருடைய வளர்ச்சி இருக்கிறது, இனிமேலும் அப்படித்தான் இருக்கும்" என்று அந்நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயனைப் பாராட்டினார் தனுஷ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x