Published : 31 Mar 2015 01:53 PM
Last Updated : 31 Mar 2015 01:53 PM

வேலை வேண்டுமா?- ஏர் இந்தியாவில் கேபின் பணியாளர் வேலை

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் பயிற்சி கேபின் பணியாளர் பணியில் (Trainee Cabin Crew) 435 காலியிடங்கள் நேரடியாக நிரப்பப்பட உள்ளன. பிளஸ் 2 முடித்த ஆண்களும், பெண்களும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். ஹோட்டல் மேனேஜ்மெண்ட் மற்றும் கேட்டரிங் டெக்னாலஜி படிப்பில் பட்டம் அல்லது பட்டயம் பெற்றிருந்தால் முன்னுரிமை அளிக்கப்படும்.

விண்ணப்பதாரரின் வயது 18 முதல் 27-க்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு. குழு விவாதம், ஆளுமைத்திறன் தேர்வு, எழுத்துத்தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்வுசெய்யப்படுவார்கள். பயிற்சிக் காலத்தில் மாதம் ரூ.15 ஆயிரம் உதவித்தொகையாக வழங்கப்படும்.

பயிற்சியை வெற்றிகரமாக முடித்த பிறகு ஆரம்ப நிலையில் சம்பளம் ரூ.35,075 அளவுக்குக் கிடைக்கும். சம்பளத்தைத் தவிர, பல அலவன்ஸ்களும், சலுகைகளும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. தகுதியுள்ள நபர்கள் ஆன்லைனில் ( >http://www.airindia.in/careers.htm) ஏப்ரல் 14-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

காலியிடங்கள் 4 மண்டலங்களுக்கும் (வடக்கு, மேற்கு, கிழக்கு, தெற்கு) அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் ஏதேனும் ஒரு மண்டலத்துக்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். தென்மண்டலத்தில் உள்ள காலியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் தேர்வுசெய்யப்படும் பட்சத்தில் அவர்கள் சென்னை, பெங்களூரு, ஐதராபாத், கோழிக்கோடு ஆகிய இடங்களில் பணியமர்த்தப்பட வாய்ப்பு அதிகம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x