Published : 19 Feb 2015 01:14 PM
Last Updated : 19 Feb 2015 01:14 PM

லிங்கா பிரச்சினை: எதிர் போராட்டக் களத்தில் ரஜினி ரசிகர்கள்!

'லிங்கா' விநியோகஸ்தர்கள் 'பிச்சை எடுக்கும் போராட்டம்' நடத்தும் அதேநாளில், அவர்களுக்கு எதிராக ரஜினி ரசிகர்கள் போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளனர்.

'லிங்கா' தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் தர முன்வந்துள்ள 10% நஷ்ட ஈடு தொகையை ஏற்க மறுத்த விநியோகஸ்தர்கள், பிச்சை எடுக்கும் போராட்டத்தை நடத்த முடிவு செய்தனர். அப்போராட்டம் நடைபெறவுள்ள தேதி குறித்த அறிவிபபி விரைவில் வெளியிடவுள்ளனர்.

இதற்காக அரசியல் தலைவர்களை சந்தித்து போராட்டத்துக்கு ஆதரவு கேட்டு வருகிறார்கள். இப்போராட்டத்துக்கு அதிமுகவின் ஆதரவு கேட்டு விளம்பரம் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், விநியோகஸ்தர்கள் நடத்தவிருக்கும் இந்தப் போராட்டத்தை எதிர்த்து, அதேநாளில் ரஜினி ரசிகர்கள் எதிர் போராட்டம் நடத்த தீர்மானித்திருக்கிறார்கள்.

இதற்காக, தமிழகம் முழுவதும் இருக்கும் ரஜினி ரசிகர் மன்றத்தின் தலைவர்கள் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். ஒவ்வொரு மாவட்டத்திலும் இப்போரட்டத்தை நடத்தவும், அதற்கு ரஜினி ரசிகர்களிடம் ஆதரவு திரட்டி வருகிறார்கள். ஃபேஸ்புக்கில் இருக்கும் ரஜினி ரசிகர்களுக்கான பக்கங்களிலும் இதற்கான ஆதரவு திரட்டப்பட்டு வருகிறது.

இணையத்தில் ரஜினி ரசிகர்கள் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், "எதையும் இழப்போம் ரஜினிக்காக, எதற்காகவும் இழக்கமாட்டோம் ரஜினியை. ரஜினி ரசிகர்களின் எச்சரிக்கை. தலைவர் ரஜினியின் புகழை கெடுக்க, அவர் செல்வாக்கை ஒழிக்க வஞ்சக சூழ்ச்சி செய்பவர்கள் அடங்காவிட்டால், அவர்களை கண்டித்து, தலைவருக்கு ஆதரவு தெரிவித்து மாபெரும் போராட்டம் ரஜினி ரசிகர்களால் நடத்தபடும்.

1996-ல் தன் தலைவரின் உத்தரவைக் கேட்டு ஆட்சியையே மாற்றியவர்கள், 2002-ல் தன் தலைவனுடைய உண்ணாவிரத போராட்டத்தில் தங்கள் சக்தியை நிரூபித்தவர்கள், 2011-ல் தங்கள் தலைவனுக்காக கோயில் கோயிலாக அலைந்தவர்கள் திராணி இவ்வளவுதானா?

எதிர்ப்புக் குரல் வலுவாக வராததால்தான் அந்தக் கூட்டம் இப்படி ஆட்டம் போடுகிறது.

நமது பலம் என்ன என்பதைக் காட்டாததால் தான், செல்வாக்கே இல்லையென நினைத்து அடுத்தடுத்த நிலைக்கு முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறது இந்தக் சதி கூட்டம். தலைவரின் தம்பிகளே, வாருங்கள் ஒரு கை பார்ப்போம், தலைவர் நம் மீது வைத்துள்ள நம்பிக்கையை காப்போம், பிரம்ம ராட்சர்களே பொங்கி எழுவோம் நம் தலைவருக்காக" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது விநியோகஸ்தர்கள் மற்றும் ரசிகர்கள் இருவருமே ஒரே நாளில் போராட்டக் களத்தில் குதிக்க முடிவு செய்திருப்பது பெரும் பரபரப்பை கிளப்பும் வகையில் அமைந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x