Published : 27 Apr 2014 03:19 PM
Last Updated : 27 Apr 2014 03:19 PM

லாரி மீது கார்கள் மோதியதில் 7 பேர் பலி: ஒசூர் அருகே பயங்கர விபத்து

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது கார்கள் மோதியதில் வேலூரைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்தனர். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இந்த கோர விபத்து நிகழ்ந்தது.

வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரிப் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன் (55). பாகாயம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்தார். இவர், சனிக்கிழமை இரவு குடும்பத்தாருடன் கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள கோயிலுக்கு காரில் சென்று கொண்டிருந்தார். ஒரு காரில் ஆனந்தன், அவரது மனைவி உமா (45), மகள் சந்தியா (15), ஆனந்தனின் தம்பி பாபு (40), அவரது மனைவி ரமணி (35), மகன் அருண் (13) ஆகியோர் இருந்தனர். காரை ஓட்டுநர் வில்லு (எ) வில்வநாதன் ஓட்டினார்.

மற்றொரு காரில் ஆனந்தன் மகள் ஐஸ்வர்யா (15), உறவினர் முருகன் (28), அவரது மகன் திவாகர் (4), பாபுவின் மகள்கள் ஷாலினி (14), ப்ரீத்தி (7) ஆகியோர் இருந்தனர்.

இவ்விரு கார்களும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகேயுள்ள கோபசந்திரம் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக சாலையோரம் கற்களை ஏற்றியபடி நின்று கொண்டிருந்த லாரி மீது ஒன்றன்பின் ஒன்றாக மோதின. அப்போது, பின்னால் வந்த மற்றொரு காரும் நிலைதடுமாறி இரு கார்கள் மீதும் மோதியது.

இந்த விபத்தில் ஆனந்தன், உமா, சந்தியா, பாபு, ரமணி, அருண் மற்றும் ஓட்டுநர் வில்லு ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த ஒசூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் கோபி, சூளகிரி காவல் ஆய்வாளர் சுபாஷ் மற்றும் காவல் துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு ஒசூர் அரசு மருத்துமனையில் சேர்த்தனர்.

போக்குவரத்து பாதிப்பு

லாரி மீது கார்கள் அடுத்தடுத்து மோதிய விபத்தால் கிருஷ்ணகிரி-ஒசூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. முதலில் வந்த கார், லாரி மீது மோதியதில் அதிலிருந்த 7 பேரும் உயிரிழந் துள்ளனர். இரண்டாவதாக வந்த காரிலிருந்த 5 பேரும் காயங்களுடன் உயிர் தப்பினர்.

இதேபோல், விபத்துக்குள்ளான மூன்றாவது காரில் ராஜஸ்தானைச் சேர்ந்த படேல், உக்கார், ராகுல், தினேஷ், பர்கரோ ஆகியோர் இருந்தனர். அவர்கள் காயமின்றித் தப்பினர்.

முன்னாள் கவுன்சிலர்

விபத்தில் இறந்த பாபு, சத்துவாச் சாரி நகராட்சி முன்னாள் உறுப்பினர். மேலும், காய்கறிச் சந்தையில் மொத்த வியாபாரம் செய்துள்ளார். உயிரிழந்த மாணவி சந்தியா 12-ம் வகுப்புத் தேர்வு எழுதியுள்ளார். அருண் 8-ம் வகுப்பு மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x