Last Updated : 12 Feb, 2015 10:07 AM

 

Published : 12 Feb 2015 10:07 AM
Last Updated : 12 Feb 2015 10:07 AM

இந்தியாவை குறைத்து மதிப்பிடக் கூடாது: கிரேக் சாப்பல் கருத்து

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரைப் பொருத்தவரையில் இந்தியாவைக் குறைத்து மதிப்பிட்டு விடக் கூடாது என ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டனும், இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளருமான கிரேக் சேப்பல் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது: இந்தியாவை எப்போதுமே குறைத்து மதிப்பிட்டு விடக் கூடாது. ஆஸ்திரேலியாவில் இதுவரை நடைபெற்ற போட்டிகளில் அவர்கள் சிறப்பாகச் செயல்படாமல் இருக்கலாம். ஆனால், உலகக் கோப்பை என்று வந்துவிட்டால் அந்த அணி வேறு ஓர் அணியாக மாறி விடும்.

உலகக் கோப்பையை வெல்ல வேண்டிய அணி எனக் கேட்டால் நான் பாரபட்சமாகவே கூறுவேன். ஆஸ்திரேலியா வெல்ல வேண்டும் என்பதே என் விருப்பம். அவர்கள் இக்கோப்பையை வெல்வதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. மற்ற அணிகளை விட நன்கு தயாராகி உள்ளனர்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா தவிர தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், நியூஸிலாந்து, தற்போது மோசமாக விளையாடி வரும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கும் கோப்பையை வெல்ல வாய்ப்பு உள்ளது.

தென் ஆப்பிரிக்கா அணி நன்றாக தயாராகி உள்ளது. அவர்கள் சூழலுக்கு ஏற்ப விளையாடும் திறனைக் கொண்டுள்ளனர். சொந்த மண்ணில் விளையாடுவது நியூஸிலாந்துக்கு கூடுதல் பலம். பாகிஸ்தான் மேற்கிந்தியத் தீவுகள் அணியையும் புறக்கணித்து விட முடியாது. இந்த அணிகளிடம் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சு உள்ளது.

அரையிறுதியில் மிகச்சிறந்த அணிகள் போட்டியிடும். சிறப்பாக விளையாடி, அதிர்ஷ்டமும் கைகொடுக்க வேண்டும். 20 ஓவர் போட்டிகள், 50 ஓவர்கள் கொண்ட இப்போட்டியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதிரடியாக விளையாடி பந்தை நாலாபுறமும் சிதறடிக்கும் சில பேட்ஸ்மேன்களுக்கு இந்த மைதானங்கள் மிகப்பெரியதாக இருக்காது என்றே தோன்றுகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x