Last Updated : 21 Jan, 2015 03:27 PM

 

Published : 21 Jan 2015 03:27 PM
Last Updated : 21 Jan 2015 03:27 PM

ரஜினி ரசிகர்கள் தொடர்ச்சியாக மிரட்டுகிறார்கள்: லிங்கா சிங்காரவேலன் வேதனை

ரஜினி ரசிகர்கள் தன்னை தொடர்ச்சியாக தொலைபேசியில் அச்சுறுத்தி வருவதாக 'லிங்கா' விநியோகஸ்தர் சிங்காரவேலன் வேதனை வெளியிட்டார்.

'லிங்கா' படத்தின் மூலம் தங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட வேண்டும் என்று விநியோகஸ்தர்கள் சார்பில் உண்ணாவிரதம் போராட்டம் மேற்கொண்டனர்.

உண்ணாவிரதம் நடைபெற்ற அன்று மாலையே 'லிங்கா' படத்தின் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். "'லிங்கா' படத்தை கொலை செய்தவர் சிங்காரவேலன்தான்" என்றும் சாடினார்.

உண்ணாவிரதம் இருந்த மறுநாள் முதல் 'லிங்கா' பிரச்சினைகள் குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்துக்களைத் தெரிவித்து வந்தார் சிங்காரவேலன். மீண்டும் உண்ணாவிரதத்துக்கு அனுமதி கோரி கமிஷனர் அலுவலகத்தில் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 'லிங்கா' பிரச்சினையில் தற்போதைய நிலைமை குறித்து சிங்காரவேலன் கூறும்போது, ""நாங்கள் உண்ணாவிரதம் இருந்த அன்று மாலை ராக்லைன் வெங்கடேஷ் பத்திரிகையாளர்களை சந்தித்து எங்கள் மீது குற்றம் சாட்டினார். அன்றைய தினமே விநியோகஸ்தர்களுக்கான பணம் பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

அடுத்த நாள் எங்களைத் தொடர்பு கொண்டு "ரஜினி சார்.. உங்கள் மீது கடும் வருத்தத்தில் இருக்கிறார். ஆகையால் வருத்தம் தெரிவித்தால் பேசலாம்" என்றார்கள். உடனே நாங்களும் பத்திரிகையாளர்களை சந்தித்து வருத்தம் தெரிவித்தோம். எங்களது பிரச்சினைக்கு ஒரு முடிவு ஏற்பட்டு இருக்கிறது என்று நம்பினோம்.

ஆனால், ராக்லைன் வெங்கடேஷ் அளித்துள்ள பேட்டியில் விநியோகஸ்தர்களுக்கு பணத்தை திருப்பி தர முடியாது என்று கூறியிருக்கிறார். எங்களையும் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. நாங்கள் வேந்தர் மூவிஸை தொடர்பு கொண்டு கேட்ட போது எங்களையும் கூப்பிடவில்லை என்று கூறினார்கள்.

தற்போது எங்களுடைய நிலைமை கிணற்றில் போட்ட கல் போல ஆகிவிட்டது. பொங்கலுக்கு 'ஐ' வெளியானதால் அனைத்து திரையரங்கிலும் இருந்து 'லிங்கா' படத்தை எடுத்துவிட்டார்கள். திரையரங்கு உரிமையாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுவிட்டதால், எங்களுக்கு மிகவும் நெருக்கடி தருகிறார்கள். ஆகையால், நாங்கள் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டம் இருக்க தீர்மானித்திருக்கிறோம்.

கடந்த முறை குறைந்த அளவில் தான் திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் கலந்து கொண்டார்கள். இம்முறை அனைவருக்கும் அழைப்பு விடுத்திருக்கிறோம்.

'லிங்கா' எவ்வளவு வசூலானது என்பதை தயார் செய்துகொண்டிருக்கிறோம். இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அனைத்து கட்சிகளின் ஆதரவை நாடியிருக்கிறோம். என்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தை தற்போது நீக்கிவிட்டேன். அதற்கு காரணம் ரஜினி ரசிகர்கள். அவ்வப்போது, ரசிகர்கள் என்னை அச்சுறுத்தி வருகிறார்கள். யாரெல்லாம் எனக்கு போன் செய்தார்கள், என்ன பேசினார்கள் என்ற அனைத்து ஆடியோவையும் பதிவு செய்து வைத்திருக்கிறேன்.

ரஜினி ரசிகர் மன்ற பொறுப்பில் இருந்து உங்களது நம்பர் கொடுத்து, உங்களைத் திட்டச் சொன்னார்கள் என்று கூறுகிறார்கள். இதுவரை 50-க்கும் மேற்பட்டோர் பேர் திட்டிவிட்டார்கள். நீயும் திட்டிக்கோ என்று சொல்லிவிடுவேன்.

ஃபேஸ்புக் பக்கத்தை வழக்கறிஞர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க நீக்கி இருக்கிறேன். என்னை அச்சுறுத்தியவர்கள் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்க இருக்கிறேன்" என்றார் சிங்காரவேலன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x