Published : 29 Jan 2015 09:31 AM
Last Updated : 29 Jan 2015 09:31 AM

லிங்கா படத்துக்கு எதிராக மீண்டும் வழக்கு: ரஜினிகாந்த், கே.எஸ்.ரவிகுமாருக்கு நோட்டீஸ்

லிங்கா படத்துக்கு எதிராக மதுரை நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் நேரில் ஆஜராக நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் மற்றும் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

மதுரை சின்னசொக்கி குளத்தைச் சேர்ந்தவர் இயக்குநர் கே.ஆர்.ரவிரத்தினம். இவர், தனது முல்லைவனம் 999 படத்தின் கதையை சமூக வலைதளமான யூ டியூப்பில் இருந்து திருடி, அந்த கதையை வைத்து லிங்கா படத்தை தயாரித்திருப்பதாகவும், லிங்கா படத்துக்கு தடை விதிக்கவும், நடிகர் ரஜினிகாந்த் மற்றும் படக்குழுவினர் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிடக்கோரியும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற அமர்வு, மனுதாரர் கீழ்நீதிமன்றத்தில் 4 வாரத்தில் மனு தாக்கல் செய்ய உரிமை வழங்கி மனுவை தள்ளுபடி செய்தது. இதையடுத்து மதுரை மாவட்ட கூடுதல் உரிமையியல் நீதிமன்றத்தில் இயக்குநர் ரவிரத்தினம் நேற்று மனு தாக்கல் செய்தார்.

அதில், லிங்கா படத்தின் கதை, நான் திரைக்கதை எழுதி தயாரித்து வரும் முல்லைவனம் 999 படத்தின் கதை ஆகும். எனவே, லிங்கா படத்தின் கதையும், முல்லைவனம் 999 கதையும் ஒன்றுதான் என்று உத்தரவிட வேண்டும். இந்த மனு நிலுவையில் இருக்கும் வரை லிங்கா படக்குழுவினர் அந்த படத்தின் கதையை தங்களுடையது என்று சொல்வதற்கு தடைவிதிக்க வேண்டும். என்னுடைய கதையை திருடியதற்காக இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என ரவிரத்தினம் கூறியுள்ளார்.

இந்த மனு நீதிபதி சரண் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் எஸ்.கருணாநிதி வாதிட்டார். லிங்கா தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோர் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்புமாறு நீதிபதி உத்தரவிட்டார். பின்னர், விசாரணை மார்ச் 16-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x