Published : 06 Jan 2015 08:33 AM
Last Updated : 06 Jan 2015 08:33 AM

நாளை வங்கி ஊழியர் வேலை நிறுத்தம் நடக்குமா?- மும்பையில் இன்று நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை

ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் இன்று மும்பையில் வங்கி நிர்வாகத்தினருடன் பேச்சு வார்த்தை நடத்துகின்றனர்.

இதில், உடன்பாடு ஏற்படாவிட்டால், நாளை (7-ம் தேதி) திட்டமிட்டபடி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் வங்கி ஊழியர்கள் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

ஊதிய உயர்வு, வாரத்துக்கு 5 நாட்கள் பணி, பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி, வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங் களை நடத்தி வருகின்றனர்.

மத்திய அரசுடன் நடத்தப்பட்ட பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்தன. இந்நிலையில், நாளை (7-ம் தேதி) அகில இந்திய அளவில் ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் ஏற்கெனவே அறிவித் துள்ளனர்.

இவ்வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக, மத்திய அரசு ஊழியர் சங்கத்தி னருடன் இறுதிக்கட்ட பேச்சு வார்த்தையில் இறங்கியுள்ளது. தில்லியில் தலைமை தொழிலாளர் ஆணையர் தலைமையில் இப்பேச்சுவார்த்தை நேற்று நடை பெற்றது.

இதுகுறித்து, பேச்சு வார்த்தையில் பங்கேற்ற அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி மத்திய அரசுடன் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தினோம். இதில், உடன்பாடு ஏற்படாததையடுத்து, ஜன. 7-ம் தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்.

இதையடுத்து, மத்திய அரசு, வங்கி ஊழியர் சங்கங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது. இதைத் தொடர்ந்து, நாளை (இன்று) மும்பையில் வங்கி நிர்வாகத்தினருடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம். இதில், முன்னேற்றம் ஏற்பட்டால் வேலை நிறுத்தம் செய்வதை மறுபரிசீலனை செய்வோம். இல்லையென்றால், திட்டமிட்டபடி வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம்.

இவ்வாறு வெங்கடாச்சலம் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x