Published : 23 Dec 2014 07:54 PM
Last Updated : 23 Dec 2014 07:54 PM

பிரபல இயக்குநர் கே.பாலசந்தர் மறைவு

சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல இயக்குநர் கே.பாலசந்தர் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 84.

பிரபல இயக்குநர் கே.பாலசந்தருக்கு சிறுநீர் பாதையில் ஏற்பட்ட நோய்த்தொற்று காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு மூத்த மருத்துவ நிபுணர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர், நடிகைகளான ரஜினி, குஷ்பு உள்ளிட்ட பலரும் அவரை சந்தித்து நலம் விசாரித்தனர்.

இந்நிலையில், இன்று மாலை 7 மணியளில் சிகிச்சை பலனின்றி கே.பாலசந்தர் காலமானார். அவருக்கு தற்போது திரையுலகினர் சமூக வலைதளங்களில் தங்களது அஞ்சலியைத் தெரிவித்து வருகிறார்கள்.

மறைந்த இயக்குநர் கே.பாலசந்தருக்கு 3 வாரிசுகள். அவரது மகன் கைலாசம் சில மாதங்களுக்கு முன்பு தான் உடல்நலம் சரியின்றி காலமானார். பிரசன்னா என்ற மகனும், புஷ்பா கந்தசாமி என்னும் மகளும் உள்ளனர்.

தமிழ் சினிமாவில் ‘இயக்குநர் சிகரம்’ எனப் போற்றப்படும் கே.பாலச்சந்தர், 'நீர்க்குமிழி' தொடங்கி 'பொய்' வரை 101 படங்கள் இயக்கி இருக்கிறார். அதிகமான டி.வி தொடர்களும் இயக்கி இருக்கிறார்.

'பொய்', 'ரெட்டை சுழி' மற்றும் 'உத்தம வில்லன்' ஆகிய 3 படங்களில் நடித்திருக்கிறார். இதில் 'உத்தம வில்லன்' திரைப்படம் இன்னும் வெளியாகவில்லை.

கலைமாமணி, பத்மஸ்ரீ, தாதா சாகேப் பால்கே விருது உள்ளிட்ட பல உயரிய விருதுகளை வென்றவர் கே.பாலசந்தர்.

இயக்குநர் சிகரத்தின் கலைப் பயணம்:

கே.பாலசந்தர் தன் வாழ்க்கையில் பல படிக்கட்டுகளைக் கடந்து முன்னேறி வந்தவர். நாடகங்கள் மூலம் பிரபலமான இவர் திரைப்படத்துறையில் தனக்கேயுரிய முத்திரையைப் பதித்தவர். இன்று அவர் நம்மிடையே இல்லை.

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் அறிவியல் பட்டப்படிப்பு படித்த பாலசந்தர் படிக்கும் போதே 1960-களில் தலைமை கணக்காளர் அலுவலகத்தில் உயர்பதவியில் இருந்தார்.

'மேஜர் சந்திரகாந்த்', 'சர்வர் சுந்தரம்', 'நீர்க்குமிழி', 'மெழுகுவர்த்தி' மற்றும் 'நவக்கிரகம்' உள்ளிட்ட பிரபல நாடகங்கள் மூலம் அவர் முன்னணிக்கு வந்தார். அவரே தயாரித்து, இயக்கிய நாடகங்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு, விமர்சகர்களின் பாராட்டுதலையும் ஒருங்கே பெற்றது.

திரைப்படத் துறையில் அவர் 1965-ஆம் ஆண்டு நுழைந்தார். தன் முதல் படத்தில் நாகேஷை குணச்சித்திர பாத்திரத்தில் நடிக்க வைத்த அவரது 'நீர்க்குமிழி' அவருக்கு பெரும்புகழை ஈட்டித் தந்தது.

அது முதல் வெள்ளித்திரையில் அவர் ஒரு நட்சத்திர இயக்குநராக ஜொலிக்கத் தொடங்கினார். அதன் பிறகு பல மொழிகளிலும் திரைக்கதை, வசனம், இயக்கம் என்று அவரது பணி பரவலாக்கம் பெற்றது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மற்றும் இந்தி மொழிகளில் இவரது படங்களுக்கு பலத்த வரவேற்பு கிடைத்தது. காதல் கதைக்கு இவரது இந்திப் படமான 'ஏக் துஜே கே லியே' ஒரு பெரும் முன்னோடியாகத் திகழ்ந்தது.

தெலுங்கில் 'மரோசரித்ரா' என்ற படம்தான் இந்தியில் 'ஏக் துஜே கே லியே'-வாக மாறியது. தெலுங்கில் சரிதா நாயகியாக நடிக்க கமல்ஹாசன் நாயகன். இந்தியில் சரிதாவுக்கு பதிலாக ரதி அக்னிஹோத்ரியை கமலின் நாயகியாக நடிக்க வைத்தார். தெலுங்கு, இந்தி இரண்டிலுமே இந்தப் படம் பல மைல்கல்களைக் கடந்து சென்றது.

மைய நீரோட்ட வணிக சினிமாவில் இயங்கினாலும், சமரசமற்ற தன்மையில் அவரிடம் தனிச்சிறப்பான உத்திகள் பளிச்சிட்டது. சிந்தனையைத் தூண்டும் விதமாகவும் வடிவ ரீதியில் ஒவ்வொரு விதமாகவும் அவர் படங்களை கொடுத்து வந்தார். பல படங்கள் சமூக-அரசியல் புலத்தை கதைக்கருவாக கொண்டது. நடுத்தரவர்க்கத்தின் வாழ்க்கை முறை அவரது படங்களில் சிறப்பாக கையாளப்பட்டது.

சினிமாவில் சமூகப் புரட்சி

பெண்கள் சமுதாயத்தின் பிரச்சினைகளை உரத்த குரலில் பேசியது இவரது சில படங்கள், அதோடு மட்டுமல்லாமல் அவர்களது உயர்வுக்கும் வித்திட்டது என்று கூறலாம்.

மது அருந்தும் பழக்கத்தின் தீமைகளை ’உன்னால் முடியும் தம்பி’ என்ற படத்தில் காட்டிய பாலசந்தர், சமுதாயத்திற்காக தன்னலமற்று உழைக்க வேண்டிய கடமையையும் அப்படத்தின் மூலம் உணர்த்தினார்.

சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல என்பதை தீவிரமாக நம்பிய அவர் தன் படத்தில் சமுதாயத்திற்கான் நற்செய்தி இருக்க வேண்டும் என்று நினைத்தார், அவ்வாறே படங்களையும் எடுத்தார்.

அவர் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களை எழுதி இயக்கியுள்ளார். இவரது படங்களில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள், இசைக்கலைஞர்கள், பாடகர்கள் பலர் தேசிய, மாநில அளவில் பல்வேறு விருதுகளை வென்றுள்ளனர்.

திறமைகளைக் கண்டுபிடிப்பதில் அவருக்கு நிகர் அவரே. இன்று நட்சத்திரங்களாகத் திகழும் பலர் இவரது கைவண்ணத்தில் உருவானவர்களே. ரஜினிகாந்த், கமல்ஹாசன், விவேக், பிரகாஷ் ராஜ், ஏ.ஆர். ரஹ்மான் என்று இந்தப் பட்டியல் இன்னும் நீளலாம்.

எத்தனையோ இளம் இயக்குநர்கள், திறமையான புதிய இயக்குநர்கள் உருவாகி வந்த போதிலும் சுமார் 50 ஆண்டுகளாக இவர் படங்களை அவருக்கே உரிய தரத்துடனும் உற்சாகத்துடனும் கொடுத்து வந்தார். இவரது உத்திகள் பல இளம் இயக்குநர்களுக்கு பெரும் தூண்டுகோலாக அமைந்துள்ளது.

இளம் நடிகர்களுக்கு மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் எப்படியோ அப்படித்தான் இளம் இயக்குநர்களுக்கு இயக்குநர் திலகம் கே.பாலசந்தர்.

வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரைக்கு...

தான் எடுத்துக் கொள்ளும் கதை மீதான உறுதிப்பாடு மற்றும் தான் நினைத்ததை கலைஞர்களிடமிருந்து தருவிக்க முடியக்கூடிய அவரது திறமையே கலைமட்டத்திலும், வணிக அளவிலும் அவரது பெரும் வெற்றிக்கு காரணம்.

கடந்த சில ஆண்டுகளாக சின்னத் திரையிலும் அவர் தனது முத்திரையைப் பதித்து வந்துள்ளார். வெள்ளித்திரையில் காண்பித்த அதே தீவிரம், காட்சியமைப்பில் துல்லியம் என்று இங்கும் அவர் சமரசத்திற்கு இடம் கொடுக்கவில்லை.

1990-களில் தூர்தர்ஷனில் ஒளிபரப்பான தொடர் ரயில் ஸ்நேகம் சீரியல்கள் அளவில் ஒரு புதிய பாதையை அமைத்துக் கொடுத்தது. கை அளவு மனசு என்ற தொடரும் மக்கள் மனதைக் கவர்ந்தது.

சன் தொலைக்காட்சியில் ரகுவம்சம் என்ற நெடுந்தொடர் மூலம் மெகா சீரியல்களும் ஏன் தரமாக இருக்கக் கூடாது என்ற சிந்தனையை இளம் இயக்குநர்கள் மத்தியில் ஏற்படுத்தினார் பாலசந்தர்.

இவரது படங்கள், அதன் கதைக்கரு, கதாபாத்திர உருவாக்கம், கதையாடல் முறை, உத்தி ஆகியவை இன்று மாணவர்களின் ஆய்வு செய்வதற்கு ஒரு கருவியாக உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.

'நினைத்தாலே இனிக்கும்' குறிப்புகள்:

* ஹோலி பண்டிகை அன்று சிவாஜி ராவ் என்ற நடிகனுக்கு ரஜினிகாந்த் என்று பெயர் மாற்றம் செய்தவர் கே.பாலசந்தர்.

* இயக்குநர் பாலசந்தரை தனது குருநாதராக பாவித்து வருபவர் கமல். காரணம், கமலின் திரையுலக வாழ்க்கையில் பல முக்கிய கதாபாத்திரங்களை அளித்து அவரை மெருகேற்றியவர் கே.பி

* திரைப்பட கல்லூரியில் பேசிய கே.பாலசந்தரிடம் அங்கு மாணவராக இருந்த சிவாஜிராவ் (ரஜினி) "நடிப்பைத் தவிர ஒரு நடிகனிடம் வேறு என்ன எதிர்பார்க்கிறீர்கள்?" என்று கேட்க கே.பி சிரித்தபடி "கேமிராவிற்கு வெளியே அவர் நடிக்க கூடாது" என்று பதிலளித்தார் கே.பி.

தமிழ் சினிமாவுக்கு கே.பி. தந்த அறிமுகங்கள்:

நடிகர்கள்: ரஜினிகாந்த், விவேக், நாசர், ராதாரவி, சார்லி, பிரகாஷ்ராஜ், சரத்பாபு, சிரஞ்சீவி, எஸ்.பி.பாலசுப்பிரமணியம், எஸ்.வி.சேகர், திலீப், பூர்ணம் விஸ்வநாதன், கவிஞர் வாலி, மதன் பாப், மேஜர் சுந்தரராஜன், டெல்லி கணேஷ், ஒய்.ஜி.மகேந்திரன்

நடிகைகள்: சுஜாதா, ஜெயப்பிரதா, சரிதா, ஜெயசித்ரா, படாபட் ஜெயலட்சுமி, ஸ்ரீப்ரியா, 'கல்கி' ஸ்ருதி, விஜி, சித்தாரா, ஸ்ரீவித்யா, பிரமிளா, ரதி, ஜெயசுதா, சுமித்ரா, பாத்திமா பாபு, யுவராணி, விசாலி கண்ணதாசன்

இயக்குநர்கள் விசு, மெளலி, அமீர்ஜான் மற்றும் இசையமைப்பாளர்கள் ஏ.ஆர்.ரஹ்மான், மரகதமணி, சாக்ஸபோன் கலைஞர் கத்ரி கோபால்நாத் ஆகியார் கே.பாலசந்தர் தயாரித்த படங்கள் மூலமாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x