Published : 30 Dec 2014 03:24 PM
Last Updated : 30 Dec 2014 03:24 PM

திருக்குறள் கொடுத்த திகில் ஐடியா! - குற்றம் கடிதல் இயக்குநர் பிரம்மா பேட்டி

திரையரங்குகளில் வெளியாகும் முன்பே கவனம், கவுரவம் இரண்டையும் குவித்து வருகிறது ‘குற்றம் கடிதல்’ திரைப் படம். அறிமுக இயக்குநர் பிரம்மா இயக்கியுள்ள இந்த படம், நடந்து முடிந்த 12-வது சென்னை சர்வதேசப் பட விழாவில் சிறந்த தமிழ் படத்துக்கான விருதை வென்றி ருக்கிறது. அதற்கு முன்பு இந்தியன் பனோரமா பிரிவில் திரையிடத் தேர்வான ஒரே படம் என்ற கம்பீரம்.

என்ன இருக்கிறது இந்த படத்தில்? ‘குற்றம் கடிதல்’ இயக்குநர் பிரம்மாவுடன் இனி…

திருக்குறளில் 44-வது அதிகாரத்தை உங்கள் படத்துக்குத் தலைப்பாகச் சூட்டியது ஏன்?

அதற்கு என் அப்பாதான் காரணம். அவர் ஒரு தமிழாசிரியர். கதைகள் சொல்லி எனக்கு திருக்குறளைக் கற்றுக்கொடுத்தவர். ‘குற்றம் கடிதல்’ என்பதில் கடிதல் என்ற சொல்லுக்கு இரண்டு அர்த்தம் உண்டு. ஒன்று, தவிர்த்தல். இரண்டாவது, கடிந்துகொள்ளுதல் அல்லது தண்டித்தல். குற்றம் நிகழக் காரணமாக அமையும் சூழ்நிலை என்ன? அவற்றை எப்படித் தவிர்ப்பது? அறத்துக்கு எதிராகக் குற்றம் புரிபவர்களை எப்படித் தண்டிப்பது என 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு அதிகாரத்தையே எழுதிச் சென்றிருக்கிறார் வள்ளுவர். படம் இயக்குவது என்று முடிவாகி, திரைக்கதையை முழுமையாக எழுதி முடித்ததும் ‘குற்றம் கடிதல்’ அதிகாரம் என் மனதில் காட்சிகளாக ஓட ஆரம்பித்தது. இந்த கதையேகூட திருக்குறள் கொடுத்த திகில் ஐடியாதானோ என்று நினைத் தேன். இதைவிட சிறப்பான தலைப்பு அமையமுடியாது என்று அதையே சூட்டிவிட்டேன்.

என்ன கதை?

மனிதர்கள் குற்றம் செய்வதில்லை. சூழ்நிலைதான் குற்றங்கள் நிகழக் காரணமாக அமைகின்றன. அப்படிப் பார்த்தால் யாருமே குற்ற வாளிகள் கிடையாது. சிஸ்டம்தான் இங்கு தவறாக இருக்கிறது. அதைச் சொல்லும் கதை. பொழுதுபோக்குப் படம்தான். ஆனால், விழிப் புணர்வை பார்வையாளரே விரும் பாவிட்டாலும் அவரது மூளைக்குள் போட்டு அனுப்பிவிடும்.

விருதுக்கான படம் என்றாலே மெதுவாக நகரும் படம் என்ற விமர்சனம் இருக்கிறது. ‘குற்றம் கடிதல்’ எந்த வகை?

அந்த கருத்தை உடைத்து நிரவும் வகை. கோவா, சென்னை பட விழாக்களில் படத்தைப் பார்த்த ரசிகர்கள் ‘இருக்கை நுனி த்ரில்லர்’ என்று பாராட்டியிருக்கிறார்கள். வெவ்வேறு வாழ்க்கைத் தரத்தில் இருக்கும் 4 முக்கிய கதாபாத்தி ரங்கள் மத்தியில் நிகழும் ஒரு சம்பவத்தின் 24 மணிநேரச் சங்கி லித்தொடர் நிகழ்வுகள்தான் கதை.

உங்களைப் பற்றி?

சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில். படித் தது, வளர்ந்தது சென்னையில். லயோலா கல்லூரியில் பட்டப் படிப்பை முடித்தபிறகு தொண்டு நிறுவனங்களுக்காக விழிப்புணர்வு விளம்பரப் படங்கள் இயக்கிக் கொண்டிருந்தேன். ‘மைம்’ எனப்படும் வசனமில்லா நாடகங் கள், வீதி நாடங்களில் முழுவீச்சில் ஈடுபட்டு வந்தேன். இதன் தொடர்ச்சியாக சினிமாவுக்கு வந்திருக்கிறேன்.

உங்கள் தயாரிப்பாளர்?

என் நண்பர் கிறிஸ்டி சிலுவப் பன்தான் முதலில் தயாரித்தார். இப்படத்தின் காட்சிகளைப் பார்த்த தயாரிப்பாளர் ஜே.கே.சதீஷ் இதன் மீது அதிக நம்பிக்கை வைத்து, தானே வெளியிடுவதாக உறுதியுடன் கூறினார். இதுபோன்ற தயாரிப்பாளர்கள் கிடைத்தால், தமிழ் சினிமாவின் தரம் இன்னும் உயரும்.

இயக்குநர் பிரம்மா



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x