Published : 01 Dec 2014 05:31 PM
Last Updated : 01 Dec 2014 05:31 PM
ஜனவரியில் வெளியாக இருக்கும் 'ஐ' படத்திற்கு இப்போதே அதிகமான திரையரங்குகள் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதால், மற்ற படங்களுக்கு திரையரங்குகள் கிடைக்குமா என்ற நெருக்கடி சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், ஏமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் 'ஐ' இறுதிகட்டப் பணிகள் முடிந்து பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவித்திருந்தார்கள். 'ஐ' உடன் அஜித்தின் 'என்னை அறிந்தால்' மற்றும் விஷாலின் 'ஆம்பள' ஆகிய படங்களும் பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவித்திருந்தார்கள்.
இந்நிலையில், 'என்னை அறிந்தால்' மற்றும் 'ஆம்பள' ஆகிய படங்களுக்கு முன்னரே 'ஐ' திரையரங்க ஒப்பந்த பணிகளை தொடங்கியது. ஏற்கெனவே பெறும் எதிர்பார்ப்பு இருப்பதால், திரையரங்க உரிமையாளர்கள் பலரும் 'ஐ'க்கு முக்கியத்துவம் அளித்திருக்கிறார்கள்.
சென்னையின் மல்டி ப்ளக்ஸ் திரையரங்குகளான சத்யம், தேவி, லக்ஸ், ஐநாக்ஸ் உள்ளிட்ட பல்வேறு திரையரங்கு வளாகங்களில் 'ஐ' வெளியாக இருக்கிறது. அதுமட்டுமன்றி தேவி, ஆல்பட், சாந்தி, கமலா, ஏ.வி.எம்.ராஜேஸ்வரி, அபிராமி உள்ளிட்ட பல்வேறு திரையரங்குகளும் 'ஐ'க்கு ஒதுக்கப்பட்டு இருக்கின்றன.
இவ்வாறு அனைத்து திரையரங்குகளும் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதால், மற்ற படங்களுக்கு திரையரங்குகள் கிடைக்குமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது. பொங்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன்பே 'ஐ' வெளியாகும் என்று அறிவித்திருந்தாலும், ஒரே வாரத்தில் முக்கிய திரையரங்குகளில் இருந்து படத்தை எடுத்துவிட முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.
'என்னை அறிந்தால்' மற்றும் 'ஆம்பள' படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த வாரத்தில் 'என்னை அறிந்தால்' டீஸர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 'ஆம்பள' படத்தில் ஒரு பாடல் இன்று வெளியாகிறது. இவ்விரு படங்களுமே விளம்பரப்படுத்தப்படுவது பொறுத்தும், ட்ரெய்லர் பொறுத்தும் மக்களிடையே எந்தவித எதிர்பார்ப்பை ஏற்படுத்தப் போகிறது என்பதைப் பொறுத்து தான் திரையரங்கு உரிமையாளர்களின் முடிவு எடுக்கப்பட இருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT