Published : 24 Dec 2014 12:28 PM
Last Updated : 24 Dec 2014 12:28 PM

மாற்று சினிமாவின் பிதாமகன்: இயக்குநர் வசந்தபாலன் புகழஞ்சலி

'இயக்குநர் சிகரம்' என்று அழைக்கப்படும் கே.பாலசந்தரின் உடலுக்கு தலைவர்கள், திரைக்கலைஞர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மறைந்த இயக்குநர் கே.பாலசந்தர் பற்றி இயக்குநர் வசந்த பாலன் அவருடைய முகப்புத்தகத்தில் வெளியிட்டுள்ள சில பதிவுகள்.

“இயக்குநர் கே. பாலசந்தர் அவர்களின் மரணம் எனக்கு பாடம் கற்றுத்தந்த ஆசிரியனை இழந்தது போல் மனம் தவிக்கிறது. மாற்று சினிமாவின் பிதாமகன். கே பாலசந்தர் உலக சினிமா வரிசை இயக்குநர்களில் ஒருவராக வைத்து போற்றப்பட வேண்டியவர்.

கே பாலசந்தர் அவர்களுடைய திரைப்படங்கள் உலக திரைப்படவிழாக்களில் கலந்து கொள்ள தகுதியான திரைப்படங்கள்.கேன்ஸ் திரைப்படவிழாவில் முதல்பரிசை வெல்ல கூடிய திரைப்படங்கள்.

சாதிக்கு எதிராகவும் மதங்களுக்கு எதிராகவும் போலியான அரசியலுக்கு எதிராகவும் தன் சாட்டையை பலமாக சுழட்டியவர் கே பாலசந்தர் அவர்கள்.தண்ணீர் தண்ணீர் படத்தை போன்ற அரசியல் படத்தை எடுத்து வெற்றி கண்டவர் கே பாலசந்தர் அவர்கள்.. அந்த தைரியம் தான் பாலசந்தர்.

விபசாரிகளின் வாழ்வில் உள்ள அழகியலை நம் முன் துணிச்சலாக வைத்தவர் கே பாலசந்தர்……தப்பு தாளங்கள்.. இன்றைக்கு கூட எடுக்க துணியமுடியாத கதையை அன்றைக்கே அழகுணர்ச்சியுடன் இசையாக பதிவு செய்தவர் கே பாலசந்தர் அவர்கள் – அபூர்வ ராகங்கள்..

விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கையை 1970களிலே நம் முன் கருப்பு வெள்ளையில் ஓடவிட்ட துணிச்சல் தான் கே பி…

கதாபாத்திரத்தின் தன்மை ஒரு திரைக்கதை எழுத மிக முக்கியம். கதாநாயகனின் கேரக்டர்சேஷன் என்ன என்று அனைவரும் கேள்வி கேட்பார்கள்…இன்று அனைவரும பேசுகிற கேரக்டர்சேஷனை படத்தில் உள்ள அனைத்து கதாபாத்திரங்களுக்கும் உருவாக்கிய மேதை கே பி …….இருமல் தாத்தாவில் தொடங்கி ஆயிரம் உதாரணம் சொல்லலாம்.

நூற்றுக்கு நூ று திரைப்படத்தை ஒரு திரில்லராக எடுத்து வெற்றி கண்டவர் கேபி..

இன்று அனைவரும பேசுகிறார்கள்.பாடலுக்குள் ஒரு கான்செப்ட் வைக்கவேண்டும் என்று அதை அன்றே செய்து காட்டியவர் கேபி..

1.சிப்பி இருக்குது முத்து இருக்குது…

2.சங்கீத ஸ்வரங்கள்…

3.ஹலோ மைடியர் ராங்நம்பர்…

4.கடவுள் அமைத்துவைத்த மேடை…

கதாநாயகிகளுக்கு இன்று சினிமாவில் காட்சிகளை இல்லை…கதாபாத்திரத்திற்கு வலிமை இல்லை கேபியின் கதாநாயகிகள் மிக வலிமையான பெண்கள்…வல்லமை பொருந்தியவர்கள் கதாநாயகர்களை விட கதாநாயக பிம்பத்திற்குள் ஒளிந்து கொண்டவர் அல்ல கேபி, ஆண்மை பொருந்திய இயக்குனர் கேபி, என்றும் அழிக்க முடியாத பலம் கேபி.

கதாநாயக பிம்பத்திற்குள் வழிபாட்டின் தளமாக இருந்த சினிமா இண்டஸ்ரிக்குள், ஸ்டுடியோவில் வேலை செய்பவர் உண்டு, கொத்தடிமைகளாய் கதை இலாகா உண்டு, இயக்குநர்கள் அடிமையாக ஸ்டுடியோவில் இருந்த காலம் அது ….கதாநாயகர்களுக்கு மரியாதை உண்டு..தயாரிப்பு நிறுவனங்கள் கோலோச்சிய காலம் அது…அன்று இயக்குநர்கள் என்றொரு ஜாதி உண்டு, அதற்கென்று தனியொரு முகம் உண்டு, குணம் உண்டு என்று உருவாக்கிக் காட்டியவர் இயக்குநர் சிகரம் கேபி…

சினிமாவில் பல சென்டிமென்டுகள் உண்டு,, முதல் காட்சியில் வெற்றி வெற்றியென கதாநாயகன் கத்தி கொண்டே வரவேண்டும் அல்லது கதாநாயகி ஆத்தா நான் பாஸாயிட்டேன் என்று சொல்லவேண்டும்…

டைட்டில் நம்பிக்கை கொண்டதாக இருக்கவேண்டும். அறச் சொல் இடம்பெறாத பாடல்வரிகள் வேண்டும் என்று இருந்த சினிமாவிற்குள் தன் முதல் பட டைட்டிலை ‘நீர்க்குமிழி’ என்று வைத்து வெற்றி கண்டவர் கேபி.

ஒரு திரைப்படத்தில் முதல் பாதி ஒரு கதை இரண்டாம் பாதி ஒரு கதை என்ற புதுமையை புகுத்தியவர் கேபி…ஒரு வீடு இரு வாசல்..

கேபி அவர்களுடை படத்தலைப்பு ஒரு கவிதை அதற்குள் கதை ஒளிந்திருக்கும்….

இருகோடுகள்

பாமாவிஜயம்

சிந்து பைரவி

அவள் ஒரு தொடர்கதை

ஜாதிமல்லி

நிழல் நிஜமாகிறது

கையளவுமனசு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x