Published : 11 Dec 2014 05:56 PM
Last Updated : 11 Dec 2014 05:56 PM

37 மீனவர்களை சிறைப்பிடித்து இலங்கை கடற்படையினர் விடுதலை

தமிழக மீனவர்கள் 37பேரையும் அவர்களின் 8 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து வியாழக்கிழமை விடுதலை செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம், மண்டபம், புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப் பட்டிணத்திலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட படகுகளில்4000க்கும் மேற்பட்ட மீனவர்கள் புதன்கிழமை கடலுக்குச் சென்று கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

வியாழக்கிழமை அதிகாலை ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் ஜெகதாப்பட்டிணத்தை சார்ந்த 6 விசைப்படகுகளை கைப்பற்றி அதிலிருந்த 27 மீனவர்களை கோபுரத் தீவிற்கும், ராமேசுவரம் மற்றும் மண்டபத்தைச் சார்ந்த இரண்டு விசைப்படகிலிருந்த 10 மீனவர்களை தலைமன்னார் கடற்படைத் தளத்திற்கும் கொண்டுச் சென்றனர். கச்சத்தீவு அருகே ராமேசுவரம் மீனவர்களைசிறைப்பிடிக்கும் போது இலங்கை கடற்படையினர் நடத்திய தாக்குதலில் ஒரு விசைப்படகு சேதமடைந்தது.

முன்னதாக கடந்த செவ்வாய்கிழமை இலங்கை அதிபர் ராஜபக்சே திருப்பதிக்கு சாமி தரிசனம் செய்ய வந்தபோது இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் 43 பேர்களைசிறைப்பிடித்து யாழ்பாணச் சிறையில் அடைத்ததற்கு மத்திய-மாநில அரசுகள் கண்டனம் தெரிவித்ததை தொடர்ந்து வியாழக்கிழமை அதிகாலை சிறைப்பிடிக்கப்பட்ட 37 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் மேலிடத்து உத்தரவுக்கிணங்கி வியாழக்கிழமை காலை 9 மணியளவில் 37 மீனவர்களையும் விசைப்படகுகளுடன் விடுதலை செய்தனர்.

வேலை நிறுத்தம்

முன்னதாக இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டு தற்போது யாழ்பாணம் சிறையில் இருக்கும் 81 மீனவர்களையும், கைப்பற்றப்பட்ட 87 விசைப்படகுகளை விடுவிக்க வலியுறுத்தியும் புதுக்கோட்டை, நாகைப்பட்டிணம், காரைக்கால், திருவாரூர் மாவட்ட மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தினை வியாழக்கிழமை துவங்கியுள்ளனர். இந்தப் போராட்டத்திற்கு ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களின் ஆதரவையும் கோரியுள்ளனர்.

இலங்கை மீனவர்களுக்கு காவல்நீட்டிப்பு

கடந்த செப்டம்பர் 25 அன்று இரண்டு படகுகளில் கன்னியாகுமாரி அருகே இலங்கை மீனவர்கள் 12 பேரை இந்திய கடலோர காவல்படையினர் கைதுசெய்தனர். இவர்கள் மீது இந்திய எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடித்தனர் எனக் குற்றஞ்சாட்டப்பட்டு ராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கபட்டிருந்தனர். மீனவர்களின் காவல் வியாழக்கிழமையோடு முடிவடைந்த நிலையில் ராமநாதபுரம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயராஜ் முன்பாக ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதி மீனவர்களை டிசம்பர் 23வரையிலும் காவலை நீட்டித்து உத்திரவிட்டார்.=

இதுகுறித்து மீனவர் பிரதிநிதி அருளானந்தம் கூறியதாவது, தமிழக சிறைகளில் இலங்கை மீனவர்கள் 30 பேர் உள்ளனர். அவர்களை நிபந்தனையின்றி தமிழக அரசு விடுதலை செய்து இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களையும், படகுகளையும் மீட்க முன்வர வேண்டும், என்றார்.

முன்னதாக இலங்கையில் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க இலங்கைத் தரப்பில் நடவடிக்கை எடுக்கப்படுமானால், தமிழகத்தில் உள்ள இலங்கை மீனவர்களை விடுவிப்பதற்குத் தேவையான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ளும் என தமிழக முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் சுட்டிக்காட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x