Last Updated : 08 Jul, 2019 11:49 AM

 

Published : 08 Jul 2019 11:49 AM
Last Updated : 08 Jul 2019 11:49 AM

நான் வளர்ந்த எல்லா இடங்களிலும் சாதி என்னைத் தொடர்ந்துள்ளது: இயக்குநர் பா.இரஞ்சித்

நான் வளர்ந்த நாட்களில், எல்லா இடங்களிலும் சாதி என்னைத் தொடர்ந்துள்ளது என இயக்குநர் பா.இரஞ்சித் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூரில் ராஜராஜ சோழன் தொடர்பாக இயக்குநர் பா.இரஞ்சித் பேசியது பெரும் சர்ச்சையாக உருவானது. இது தொடர்பாக அவர் மீது கலகம் உண்டாக்குதல், சாதி மோதலை உருவாக்குதல் ஆகிய பிரிவுகளின் கீழ் திருப்பனந்தாள் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். பல நாட்களுக்குப் பிறகு, இந்த வழக்கில் இயக்குநர் பா.இரஞ்சித்துக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டது.

தற்போது இந்த விவகாரம் தொடர்பாக 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்குப் பேட்டியளித்துள்ளார் இயக்குநர் பா.இரஞ்சித். அதில், "ஒரு இயக்குநர், அவரது படைப்பிலும், படைப்பைத் தாண்டியும் அரசியல் ரீதியாக இருப்பது ஏன் முக்கியமாகிறது?” என்ற கேள்விக்க, “நான் என் வாழ்வில் கற்றுக்கொண்டதை பதிவிட வேண்டும். நான், என் வாழ்க்கையில் எதிர்கொண்ட விஷயங்களை என் படைப்பிலும், மற்ற இடங்களிலும் சொல்ல வேண்டும்.

நான் வளர்ந்த நாட்களில் எல்லா இடங்களிலும் சாதி என்னைத் தொடர்ந்துள்ளது. அது கொண்டாட்டமோ, ஏமாற்றமோ... ஒரு இயக்குநராக மாறியபின் அதுபற்றிப் பேசுவது அவசியமாகிறது. எனது படைப்பாற்றல் திறனின் வடிகாலாக மட்டுமே படங்களை எடுக்க முடியாது..

உதாரணத்துக்கு, ஒரு மரத்தையோ, கிணற்றையோ, மைதானத்தையோ எடுத்துக் கொள்ளுங்கள். என் கிராமத்திலிருந்த மக்கள் அவற்றை மகிழ்ச்சிக்கான இடமாக, அழகான இடங்களாகப் பார்த்தார்கள். ஆனால், என்னால் முடியவில்லை. ஏனென்றால், அவை எனக்குச் சொந்தமானவை இல்லை என இந்தச் சமூகம் எனக்குச் சொல்லிக்கொண்டே இருந்தது.

ஒரு தலித்தாகிய நான், மரம் ஏறவோ, கிணற்றைப் பயன்படுத்தவோ கூடாது என யாராவது சொல்வார்கள். நான் இதுபற்றி யோசித்துக்கொண்டே இருந்தேன். பொதுவில் ஒருவரால் எளிதாகப் பயன்படுத்தப்படும் ஒரு விஷயம், நமக்கு ஏன் கிடைக்கவில்லை? எனவே, இன்று ஒரு கிணற்றையோ, மரத்தையோ படம்பிடிக்கும்போது, என்னால் கலைநயத்துடன் அதைப் பார்க்க முடியவில்லை. அது எனக்கு வேறொரு கதையைச் சொல்கிறது. அந்தக் கதையைச் சொல்லும் இயக்குநராக நான் இருக்க விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார் பா.இரஞ்சித்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x