Last Updated : 06 Jul, 2019 07:31 AM

 

Published : 06 Jul 2019 07:31 AM
Last Updated : 06 Jul 2019 07:31 AM

தோல்வி எனக்கு புதிதல்ல.. வெற்றிதான் புதிது!- விக்ராந்த் நேர்காணல்

கடந்த 2013-ல் வெளிவந்த ‘பாண்டியநாடு’ திரைப்படம் முதலே, ஏறுமுகமாக பயணித்து வருகிறார் விக்ராந்த். ‘தொண்டன்’, ‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’ உள்ளிட்ட படங்களைத் தொடந்து தற்போது ‘வெண்ணிலா கபடி குழு-2’, ‘பக்ரீத்’, விஜய்சேதுபதி எழுத்தில் ஒரு படம் என தொடர்ந்து கவனம் ஈர்த்து வருகிறார். அவருடன் ஒரு நேர்காணல்..

சமீபகாலமாக சினிமா உங்களுக்கு மிகுந்த புத்துணர்வை கொடுத்திருப்பதுபோல தெரிகிறதே?

நிறைய எதிர்பார்த்து, ஏமாற்றத்தை மட்டுமே பெற்றுக் கொண்டிருந்தேன். இப்போ, பெரிசா எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உழைப்பை மட்டும் செலுத்துகிறேன். வெற்றியோ, தோல்வியோ.. வருவது வரட்டும்.. முன்னேறி போய்ட்டேஇருன்னு மனசு அதுவா பக்குவப்பட்டிருக்கு. தோல்வி எனக்கு புதிதல்ல. வெற்றிதான் புதிது. செய்ற வேலையை சிறப்பா, பொறுப்பா செய்தா போதும்.

ஒரு பண்டிகை, ஓர் ஒட்டகம், நீளும் பயணம் என ‘பக்ரீத்’ பட போஸ்டர், டிரெய்லர் ஏதோ சொல்ல வருதே?

ஒரு பக்ரீத் நாளில் தொடங்கி அடுத்த ஆண்டு வரும் பக்ரீத் பண்டிகையோடு நிறைவுபெறும் கதை. இடைப்பட்ட காலகட்டத்துக்குள் நான், நாயகி, ஒரு குழந்தை,ஒட்டகம் இந்த நால்வருக்குள் நடக்கும் நிகழ்வுகள்தான் களம். சென்னை அருகேஒரு கிராமத்தில் தொடங்கி, மகாராஷ்டிரா, ராஜஸ்தான் என படம் நீளும்.

பாலைவன ஒட்டகத்துக்கு ஊருக்குள் என்ன வேலை?

நம்ம வீட்டுல ஆடு, மாடு வளர்ப்பதுபோலத்தான் இப்படத்தில் ஒட்டகம் இருக்கும். படத்தில் சுமார் 70 சதவீத அளவுக்கு ஒட்டகம்தான் நிறைஞ்சிருக்கும். தவிர,சாகசம் செய்வதுபோன்ற விஷயங்கள் எதுவும் இருக்காது. முழுக்க எதார்த்தம் மட்டும்தான். உண்மை சம்பவங்கள் அடிப்படையில் வெளிவந்த ‘டிராக்ஸ்’ (Tracks) என்ற ஆஸ்திரேலியப் படத்துக்கு பிறகு, ஒட்டகம் தொடர்பாக உலகின் 2-வது படம் இது. இந்தியாவில் ஒட்டகம் பற்றிய முதல் படம் இதுதான். இயக்குநர் ஜெகதீசன் சுபு முதலில் கதை சொல்லும்போதே, ‘‘ஒட்டகம் ஒருபக்கம் வந்துட்டுப்போகும். நாம நடிச்சுட்டு வந்துடலாம்’னுநெனைக்காதீங்க. படக்குழுவினர் எல்லோரும் 40 நாட்களுக்கு ஒட்டகத்துடன்தான் வாழ்க்கை நடத்தப்போறோம்’ என்றார். அது ஒரு சுவாரஸ்ய பயணம்.

‘வெண்ணிலா கபடி குழு 2’-ல் நீங்க எப்படி? அதுதவிர, இன்னொரு விளையாட்டு படத்திலும் நடிக்கிறீர்களே..

‘பாண்டிய நாடு’ படம் மூலம் எனக்கு நல்ல அடையாளம் தந்தவர் சுசீந்திரன். அவரை பார்த்தப்போ, ‘டேய் தம்பி.. இந்தமாதிரி ஒரு படம். கதைக்கு நான்தான் பொறுப்பு. நம்ம டீம்தான் வேலை செய்யுது. உனக்கு சரியா இருக்கும்’ என்றார். முதல் பாகத்தில் கதாநாயகன் பாத்திரம் இறப்பதுபோல அமைந்ததால், 2-ம் பாகத்தில் எனக்கு அந்த ரோல் கிடைச்சிருக்கு. மற்றபடி முதல் பாகத்தில் இருந்த கிஷோர், சூரி உள்ளிட்டோர் இதிலும் இருக்காங்க. இந்த படத்துக்கு கபடி, ஆட்டம், சண்டைனு நிறைய பயிற்சி தேவைப்பட்டுது.

இன்னொரு படத்தை என் அண்ணன் சஞ்சீவ் இயக்குகிறார். நானும் விஷ்ணு விஷாலும் சேர்ந்து நடிக்கிறோம். நம் நாட்டில் உள்ள ஒரு விளையாட்டு தொடர்பான களம். திரைக்கதை, எழுத்துவேலைகளை விஜய்சேதுபதி கவனிக்கிறார். அக்டோபரில் படப்பிடிப்பு தொடங்கும். அதுவரை விளையாட்டுப் பயிற்சிதான்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x