Last Updated : 05 Jul, 2019 03:06 PM

 

Published : 05 Jul 2019 03:06 PM
Last Updated : 05 Jul 2019 03:06 PM

நாம் சாதி வெறியர்கள்: தூத்துக்குடி தம்பதி கொலை தொடர்பாக இயக்குநர் பா.இரஞ்சித் காட்டம்

நாம் சாதி வெறியர்கள் என்று தூத்துக்குடி தம்பதி கொலை தொடர்பாக இயக்குநர் பா.இரஞ்சித் காட்டமாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

குளத்தூர் தந்தை பெரியார் நகரைச் சேர்ந்த திருமணி மகன் சோலைராஜா(24). குளத்தூர் அருகே பல்லாகுளத்தை சேர்ந்த அழகர் மகள் பேச்சியம்மாள் என்ற ஜோதி(21). இவர்கள் இருவரும், அப்பகுதியில் உள்ள உப்பளத்தில் பணியாற்றியபோது பழக்கம் ஏற்பட்டு, காதலித்தனர்.

தங்கள் காதலுக்கு எதிர்ப்பு வரவே, பெற்றோருக்கு தெரியாமல் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொண்டனர். நேற்று(ஜுலை 4) அதிகாலையில் மின் தடை ஏற்பட்டதால் கணவன், மனைவி இருவரும் வீட்டுக்கு வெளியே தூங்கியுள்ளனர். காலையில் சோலைராஜா வீட்டுக்கு அவரது தாய் முத்து சென்றபோது, சோலைராஜாவும், ஜோதியும் வெட்டி கொலை செய்யப்பட்டுக் கிடந்ததை பார்த்து கதறி அழுதார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கி நடத்தி வந்தார்கள். அப்போது ஜோதியின் தந்தை அழகரை பிடித்து விசாரித்தனர். கொலையில் அவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்ச்சியாக காதல் திருமணத்தால் நடைபெறும் கொலைகள் தொடர்பாக இயக்குநர் பா.இரஞ்சித் தனது ட்விட்டர் பதிவில், “கடந்த பத்து தினங்களில் மேட்டுப்பாளையம் கனகராஜ் - வர்ஷினிபிரியா, திருச்சி பாலக்கரை பசுமடம் சத்தியநாராயணன், இவர்களை தொடர்ந்து  தூத்துகுடி (மா) குளத்தூர் சமத்துவபுரத்தில் சாதிமறுப்பு திருமணம் செய்த சோலைராஜா - ஜோதி படுகொலை. நாம் தமிழர்!நாம் இந்து! நாம் திராவிடர்! இல்லை நாம் ஜாதி வெறியர்கள்.

படுகொலை செய்யப்பட்ட  சோலைராஜா - ஜோதி  இருவரும் பட்டியல் இனத்தை சார்ந்தவர்கள். சுயசாதி பற்று இருக்கும் பட்டியலினத்தவர்களே! விதைத்தவர்கள் அறுவடை செய்து கொண்டு இருக்கிறார்கள்! செய்வார்கள்!. சுய சாதி பற்று இன்னும் பல கொடூரத்தை செய்ய காத்து கொண்டிருக்கிறது. விழித்து கொள்வோமா?...

“யாருங்க இப்போதெல்லாம் ஜாதி பாக்குறாங்க?”ஒரு கூட்டம் பேசிகிட்டு இருக்கும்! “இவனுங்கதான் ஜாதியத்தை பேசிபேசி வளக்குறாங்க” என்று சொல்லுவார்கள் சிலர்! வழக்கம் போல் கொலைகள் மறக்கப்படும்! மற்றும் ஒன்று நிகழும்!” என்று தெரிவித்துள்ளார் இயக்குநர் பா.இரஞ்சித்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x