Last Updated : 02 Jul, 2019 12:07 PM

 

Published : 02 Jul 2019 12:07 PM
Last Updated : 02 Jul 2019 12:07 PM

திரைத்துறையிலிருந்து சாய்ரா வாஸிம் விலகல்: சித்தார்த் சாடல்

திரைத்துறையிலிருந்து சாய்ரா வாஸிம் விலகியதற்கு நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

நிதேஷ் திவாரி இயக்கத்தில் அமீர் கான் நடிப்பில் வெளியான படம் 'தங்கல்’. வசூல் ரீதியாக மாபெரும் சாதனையை இந்தப் படம் நிகழ்த்தியது. இந்தப் படத்தின் மூலமாக சாய்ரா வாஸிம் இந்தித் திரையுலகிற்கு அறிமுகமானார். மேலும் 'தங்கல்' படத்துக்காக சிறந்த தேசிய உறுதுணை நடிகைக்கான விருதையும் பெற்றார். குறுகிய காலத்திலேயே சிற்சில படங்கள் மூலம் எண்ணற்ற விருதுகளையும் பாராட்டுக்களையும் குவித்தவர் வாஸிம்.

ஆனால் சமீப காலமாக தான் மன அழுத்தத்தில் இருப்பதாகவும் தனக்கு நிம்மதியில்லை எனவும் சமூக வலைதளங்களில் குறிப்பிட்டு வந்தார். மேலும், சில தினங்களுக்கு முன்பு, “தனது நம்பிக்கையிலும் மதத்திலும் தலையீடுகள் ஏற்படுவதால் தனது வேலைமுறைகளில் தான் மகிழ்ச்சியாக இல்லை'' எனவும், "நான் இங்கே சரியாக பொருந்தினாலும், நான் இங்கு சார்ந்தவர் இல்லை'' என்றும் குறிப்பிட்டு அதனால் தான் சினிமாவிலிருந்து விலகுவதாகவும் அறிவித்தார்.

இந்த அறிவிப்புக்கு காஷ்மீர் அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். ஆனால், சாய்ரா வாஸிம் அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார் சித்தார்த். இது தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில், “இது உன் வாழ்க்கை. எது விருப்பமோ அதை செய். உன் எதிர்காலத்தில் நல்லது மட்டுமே நடக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

நான் நம் கலையிலும், நம் தொழில் தான் நம் வாழ்க்கை என்பதிலும் நம்பிக்கை கொண்டுள்ளேன். இதிலிருந்து மதத்தை தனித்துப் பார்க்க போரடுகிறோம். அதற்கு இங்கே இடமில்லை. உன் மதம் தான் உன்னை இதை செய்ய வைத்தது என்றால் நீ இந்த இடத்தைச் சேர்ந்தவளே அல்ல. நல் வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார் சித்தார்த்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x