Published : 29 Jun 2019 09:44 AM
Last Updated : 29 Jun 2019 09:44 AM

திரை விமர்சனம்: சிந்துபாத்

தென்காசி பெண்ணான அஞ்சலி, அக்கா கணவர் வாங்கிய கடனுக் காக மலேசியாவின் ரப்பர் தோட்டத் துக்கு வேலைக்கு போகிறார். விடுமுறை யில் ஊருக்கு வரும் அவர், குடும்பத்தின் எதிர்ப்பை மீறி சில்லறைத் திருடனான விஜய்சேதுபதியை காதலித்து கரம்பிடிக் கிறார். மீண்டும் மலேசியா செல்லும் அஞ்சலியை ஒரு கும்பல் தாய்லாந்துக்கு கடத்திச் செல்கிறது. அவரை மீட்டுவர கடல் கடந்து செல்லும் விஜய்சேதுபதி, கடத்தல் கும்பலுடன் மோதி, மனைவியை மீட்டாரா, இல்லையா என்பது கதை.

இயக்குநர் எஸ்.யு.அருண்குமாருடன் 3-வது முறையாக கூட்டணி சேர்ந்துள்ள விஜய்சேதுபதி, சிறு இடைவெளிக்குப் பிறகு, குடும்ப சென்டிமென்ட் கலந்த ஆக்சன் கதையில், கமர்ஷியல் கதாநாய கனாக முகம் காட்டியிருக்கிறார். லாஜிக் பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் திரைக்கதை எழுதியிருக்கிறார் இயக்குநர்.

செவித்திறன் குறைந்தவராக விஜய் சேதுபதியின் நடிப்பு சுவாரஸ்யம். சண்டைக் காட்சிகளில் வேகம் காட்டி ரசிகர்களுக்கு ஆக்சன் விருந்து படைக் கிறார். அவரிடம் கத்திக் கத்திப் பேசியே காதலிக்கத் தொடங்குகிறார் அஞ்சலி. மாமா அருள்தாஸிடம் முறைப்பு காட்டும் போதும், விஜய்சேதுபதியிடம் விரைப்பு காட்டும்போதும் கெத்தாக தெரிகிறார். கடத்தல் கும்பலிடம் சிக்கித் தவிக்கும் போது நடிப்பில் மிளிர்கிறார்.

குறும்பும், கில்லாடித்தனமும் நிறைந்த ‘சூப்பர்’ என்ற பாத்திரத்தில் அறிமுகமாகி உள்ள விஜய்சேதுபதியின் மகன் சூர்யா வுக்கு நல்வரவு. கிடைக்கும் இடங்களில் எல்லாம் அப்பா போலவே ஸ்கோர் செய்கிறார்.

சிறுமியின் தந்தையாக வரும் விவேக் பிரசன்னாவும், கண்களால் மிரட்டும் வில்லனாக லிங்காவும் அளவான நடிப்பை வழங்குகின்றனர்.

முதல் பாதியில் அவ்வப்போது பாடல் கள் குறுக்கிட்டாலும் விஜய்சேதுபதி, சிறுவன் சூர்யா செய்யும் அலப்பறைகள் படத்தை சுவாரஸ்யமாக நகர்த்துகின்றன. ஆனால், அதில் கிராமியத் தன்மை குறைந்து, ஹீரோயிஸ காட்சிகளாகச் சுருங்கிவிடுகின்றன. அதேநேரம், ஆணா திக்க செருக்கை எதிர்த்துப் போராடும் துணிச்சலான பெண்ணாக சித்தரிக்கப் பட்டுள்ள அஞ்சலி கதாபாத்திரம் இயல்புத் தன்மையுடன் ஈர்க்கிறது. வீட்டை விற்க முயற்சிக்கும் ஜார்ஜ் மரியானின் இயல் பான நகைச்சுவை ரசிக்க வைக்கிறது.

மலேசியா, தாய்லாந்து, கம்போடியா என கதை பயணிக்கிறது. ஆனால், இடை வேளையை நெருங்கும் வரை படம் எதை நோக்கிப் போகிறது என்பதே தெரிய வில்லை. கடத்தல் கும்பலிடம் அஞ்சலி சிக்கும்போதுதான் கதை சூடுபிடிக்கிறது. மலேசியாவுக்கு பயணிக்கும் விஜய் சேதுபதி, சைக்கோ கொலைகாரன் லிங்கா வீட்டில் திருடப் போகும்போது திரைக்கதை வேறு தளத்துக்கு மாறுகிறது. லிங்காவின் கும்பலிடம் சிக்கி, அங்கிருந்து தப்பி, மீண்டும் சிக்கி, மீண்டும் தப்பி என நாடு விட்டு நாடு கதை பயணிக்கும்போது அலுப்பு தட்டுகிறது. ஒரு கட்டத்தில் நாய கன் எந்த நாட்டில் இருக்கிறார் என்ற குழப் பத்தை ஏற்படுத்திவிடுகிறார் இயக்குநர்.

முதல்பாதியில் தென் தமிழக கிராமத் தின் அழகையும், பிற்பாதியில் கடத்தல் கும்பலின் தாய்லாந்து கொட்டகையின் மிரட்சியையும் ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணன் கச்சிதமாக பதிவு செய்துள்ளார். யுவன்ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை கதைக்கு பெரும் பலம்.

அஞ்சலி எதற்காக மாமனை வெறுக் கிறார்? மொழி தெரியாத ஊரில் வில்லனை விஜய்சேதுபதி எளிதாக வெல்வது எப்படி? என்ற கேள்விகளுக்கு பதில் இல்லை. கதையில் ஒட்டாத உணர்வுகளும், லாஜிக் மீறிய காட்சிகளும் அயர்ச்சியை தரு கின்றன. அழகுசாதன துறையில் தோல் விற்பனை நடக்கும் அம்சத்தை இன்னும் அழுத்தமாக காட்டியிருக்கலாம்.

கதாநாயகன் - வில்லன் ஆக்சன் காட்சி கள் அமர்க்களம். ஆனால் ‘திரு’ என்ற முரட்டுக் கதாநாயகனுக்கு ஏற்றவராக வில் லன் இல்லை. பெரிய பீடிகை கொடுத்து விட்டு, வில்லன் கதாபாத்திரத்தை மொக்கையாக முடித்தது, அந்நிய மண்ணில் மனைவியை மீட்கப் போராடும் நாயகனிடம் புத்திசாலித்தனங்கள் இல்லா தது ஆகிய குறைகளால் ‘சிந்துபாத்’ திக்கு தெரியாமல் தடுமாறினாலும், மசாலா ஆக்சன் படமாக மனதை கவர்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x