Published : 05 Aug 2017 03:34 PM
Last Updated : 05 Aug 2017 03:34 PM
'மாயவன்' படத்தில் 1000-க்கும் அதிகமான கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக இயக்குநர் சி.வி.குமார் தெரிவித்தார்.
சந்தீப் கிஷன், லாவண்யா திரிபாதி, டேனியல் பாலாஜி, ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடித்துள்ள 'மாயவன்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் சி.வி.குமார். ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்தை சி.வி.குமார் தயாரித்திருக்கிறார்.
கிராபிக்ஸ் பணிகள் நீண்ட நாட்களாக நடைபெற்று, தற்போது தணிக்கையில் 'யு/ஏ' சான்றிதழ் கிடைத்திருக்கிறது. செப்டம்பர் 1-ம் தேதி வெளியாகவுள்ள இப்படம் குறித்து சி.வி.குமாரிடம் கேட்ட போது அவர் கூறியிருப்பதாவது:
இறுதிக்கட்ட பணிகளுக்கு நீண்ட நாட்கள் எடுத்துக் கொண்டோம். ஏனென்றால் படத்தில் நிறைய கிராபிக்ஸ் காட்சிகள் இருக்கிறது. அனைத்துமே நாங்கள் கற்பனையில் உருவாக்கியது. நினைத்தது சரியாக வரவில்லை என்றவுடன் மீண்டும் வேறு மாதிரி கிராபிக்ஸ் செய்து இணைத்துள்ளோம். படத்தில் மொத்தமாக 1000-க்கும் அதிகமான கிராபிக்ஸ் காட்சிகள் இருக்கின்றன. இதற்கே ஒரு பெரும் தொகை செலவாகியுள்ளது.
எனது நிறுவனத்தின் தயாரிப்பை எப்படி யாரும் குறை சொன்னது இல்லையோ, அதே போல எனது இயக்கத்தில் வரும் படத்தையும் யாரும் குறை சொல்லக் கூடாது. அந்த நம்பிக்கையை 'மாயவன்' கொடுத்துள்ளது.
கொலை பின்னணி கதை என்றில்லாமல், படம் முடிந்தவுடன் படத்தைப் பற்றி சில விஷயங்கள் யோசிக்க வைக்கும். தண்ணீருக்கு அடியில், விமான நிலையம், சாலைகள், காவல்துறை அலுவலகம் என மொத்தமாக சுமார் 70 இடங்களில் படப்பிடிப்பு நடத்தியுள்ளோம். ஆகஸ்ட் 11-ம் தேதி ட்ரெய்லர் வெளியாகவுள்ளது
இவ்வாறு சி.வி.குமார் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT