Published : 10 Aug 2017 06:08 PM
Last Updated : 10 Aug 2017 06:08 PM
ஒரு திரைப்படம் சமூக அறிவியல் பாடமல்ல என்று 'தரமணி' படத்தை விளம்பரப்படுத்தும் பேட்டியில் ஆண்ட்ரியா தெரிவித்துள்ளார்.
ராம் இயக்கத்தில் வசந்த் ரவி, ஆண்ட்ரியா, அஞ்சலி நடிப்பில் உருவாகியுள்ள 'தரமணி'. யுவன் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தை ஜே.சதீஷ் குமார் தயாரித்திருக்கிறார். ஆகஸ்ட் 11-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தை விளம்பரப்படுத்த 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்துள்ளார் ஆண்ட்ரியா.
அதில், "பெண்களை பின் தொடர்தலை தமிழ் சினிமா உயர்வாக காட்டிவிட்டதாக நினைக்கிறீர்களா?" என்ற கேள்விக்கு ஆண்ட்ரியா அளித்த பதில் பின்வருமாறு:
ஒரு திரைப்படம் சமூக அறிவியல் பாடமல்ல. அதை ஏன் ஒரு படமாக மட்டும் பார்க்கக் கூடாது?நம் பெற்றோர் தலைமுறையில், மொபைல் போன்கள் இல்லாதபோது, ஒரு ஆண் பெண்ணை தொடர்வதிலிருந்துதான் பல காதல் கதைகள் ஆரம்பமாயின. அவர்களுக்கு அதுதான் நிஜம்.
தற்போது அனைத்துக்கும் இங்கு இடமுள்ளது என நினைக்கிறேன். தனது காதலியின் ஆண் நண்பர்கள் மீது பொறாமை கொண்டு பேசும் ஆண்களிலிருந்து, காதலி மீது சந்தேகப்பட்டு அவளைக் கொலை செய்யும் ஆண்களும் இருக்கிறார்கள். பின் தொடர்தலும் அப்படித்தான்.
கள்ளம் இல்லாமல் ஒரு பெண்ணைக் காதலிப்பதால் மட்டும் பின் தொடர்தலிலிருந்து, அவளது முகத்தில் அமிலம் வீசுபவர்கள் வரை பலர் இருக்கிறார்கள். எல்லாமே பின் தொடர்தலை உயர்வாகக் காட்டுவதாக ஆகாது.
இவ்வாறு ஆண்ட்ரியா தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT