Published : 27 Jul 2017 06:15 PM
Last Updated : 27 Jul 2017 06:15 PM
டிராஃபிக் ராமசாமியை வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகும் படத்தில் நாயகனாக நடிக்கவுள்ளார் எஸ்.ஏ.சந்திரசேகரன். விஜய் விக்ரம் இயக்கவுள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கையைத் தழுவி கதை ஒன்றை எஸ்.ஏ.சந்திரசேகரன் எழுதி வருவதாக செய்திகள் வெளியானது. தற்போது படக்குழு அதனை உறுதிப்படுத்தியுள்ளது.
இப்படத்தில் டிராஃபிக் ராமசாமியாக எஸ்.ஏ.சந்திரசேகரனே நடிக்க, புதுமுக இயக்குநர் விஜய் விக்ரம் இயக்கவுள்ளார். க்ரீன் சிக்னல் நிறுவனம் தயாரிக்கவுள்ளது
டிராஃபிக் ராமசாமியாக நடிக்கவிருப்பது குறித்து எஸ்.ஏ.சி கூறியிருப்பதாவது:
பொதுமக்களின் நலனிற்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது நலவழக்குகளை தொடர்ந்தவர் சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி. அப்படி தொடர்ந்த பல வழக்குகளில் மக்களுக்கு சாதகமான பல அதிரடி தீர்ப்புகளையும் வாங்கித் தந்தவர். இத்தீர்ப்புகளினால் பாதிக்கப்பட்ட அதிகாரிகளும், ரவுடிகளும், அரசியல்வாதிகளும் இவர் மீது கோபம் கொண்டு இவரை பல வகையில் கொடுமைப்படுத்தியிருக்கிறார்கள்.
அதுமட்டுமல்லாமல் பல முறை டிராஃபிக் ராமசாமியை கொல்வதற்கும் முயற்சிகள் நடந்தன. அப்படி இருந்தும் தொடர்ந்து அவர் சமூகத்திற்காக இன்றும் போராடிக்கொண்டே தான் இருக்கிறார். அந்த போராட்ட குணம் என்னைக் கவர்ந்தது. என் உதவி இயக்குநரும், பல குறும்படங்களை இயக்கியவருமான விஜய் விக்ரம் இப்படத்தை இயக்குகிறார். இவர் ஏற்கெனவே என்னை வைத்து 'மார்க்' என்ற குறும்படத்தை இயக்கியவர்.
இவ்வாறு எஸ்.ஏ.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
இப்படம் குறித்து விஜய் விக்ரம் கூறியிருப்பதாவது:
இப்படம் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு சமூகப் போராளியின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுப்பதால் பல திருப்புமுனை சம்பவங்களும், திருப்பங்களும் யதார்த்தமாவே அமைந்திருக்கிறது. இந்தப் படம் திரைக்கு வரும்போது சமூகத்தில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உறுதி. இப்படத்தை கிரீன் சிக்னல் பட நிறுவனம் தயாரிக்கிறது.
இவ்வாறு விஜய் விக்ரம் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT