Published : 05 Jul 2017 06:17 PM
Last Updated : 05 Jul 2017 06:17 PM
கண்டிப்பாக 'பாகுபலி' சாதனையை '2.0' முறியடிக்கும் என்று 3டி தொழில்நுட்ப விழிப்புணர்வு கருத்தரங்கில் திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்தார்.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள '2.0' படத்தின் கிராபிக்ஸ் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் உருவாகியுள்ள முழுமையான முதல் 3டி தொழில்நுட்ப படம் '2.0' ஆகும். 3டி கேமிராவில் ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தை திரையிடுவது தொடர்பாக, திரையரங்கு உரிமையாளர்களுக்கு முழுமையான 3டி தொழில்நுட்ப விழிப்புணர்வு கருத்தரங்கம் சென்னையில் நடைபெற்றது. இதில் லைகா நிறுவனத்தின் தமிழக செயல் அதிகாரி ராஜூ மகாலிங்கம், அபிராமி ராமநாதன், திருப்பூர் சுப்ரமணியம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.
இந்நிகழ்வில் திருப்பூர் சுப்ரமணியம் பேசியதாவது:
ஒரே நாடு.. ஒரே வரி.. என்பதை கட்டுவதற்கு தயாராக இருக்கிறோம். 10 வருடங்களாக தமிழக திரையரங்குகள் மீது டிக்கெட் விலையை அதிகப்படுத்தி வாங்குகிறார்கள் என குற்றச்சாட்டுகள் இருக்கிறது.
நீங்கள் 15 வருடங்களாக டிக்கெட் கட்டணத்தை உயர்த்தாமல் இருக்கிறீர்கள். எங்களுக்கு ஒரு நியாயமான டிக்கெட் விலையை நிர்ணயம் செய்துக் கொடுங்கள். தமிழகம் முழுவதும் இணையம் வழியாக டிக்கெட் கொடுக்கிறோம். அனைத்து டிக்கெட்களிலும் விலையைப் போட்டு, ஜிஎஸ்டி எண்ணைக் குறிப்பிட்டே ஜனங்களிடம் அளிக்கிறோம். சினிமாவில் எந்தவொரு தவறும் நடைபெறாமல் இருப்பது எங்களுடைய பொறுப்பு என முதலமைச்சர் எடப்பாடி அவர்களிடமே உறுதிக் கொடுத்துள்ளோம்.
மக்களிடம் தமிழ் சினிமாவை கொண்டு செல்ல எங்களுக்கு உறுதுணை புரியுங்கள் என்று முதல்வரிடம் எடுத்துரைத்தோம். அதை வெகுவாக பாராட்டினார்.
இந்தியாவின் பெருமையைப் பேசப்படுவதற்கு எப்படி 'பாகுபலி' என்ற படம் வந்ததோ, அந்த சாதனையை '2.0' முறியடிக்க வேண்டும். அதை தமிழனாக விரும்புகிறேன். அது நடக்கும் என நம்புகிறேன்
இவ்வாறு திருப்பூர் சுப்ரமணியம் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT