Published : 10 Jul 2017 01:11 PM
Last Updated : 10 Jul 2017 01:11 PM
'பவர் பாண்டி' கதையை உருவாக்கியதிற்கான காரணத்தை 'வேலையில்லா பட்டதாரி 2' பத்திரிகையாளர் சந்திப்பில் தனுஷ் தெரிவித்தார்.
செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ், அமலா பால், கஜோல், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'வேலையில்லா பட்டதாரி 2'. ஜூலை 28-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
இச்சந்திப்பில் 'பவர் பாண்டி' படத்தின் 2-ம் பாகம் எப்போது என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு தனுஷ் கூறியதாவது:
’பவர் பாண்டி’ படத்தில் 80 வயதைத் தாண்டிய ஒருவருடைய காதலை நீங்கள் பார்த்தீர்கள். ஆனால் நான் 50 - 60 வயது தாண்டிய பெரியவர்களை பணம் கொடுக்காமல் வீட்டு வேலை செய்யும் உதவியாளர்களாக பார்க்கிறார்கள். பலர் வேலைக்கு செல்வதால் என்னுடன் வந்திருந்து குழந்தையைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்பதை பல இடங்களில் பார்த்தேன்.
பெற்றோர்கள் 50- 60 வயது தாண்டியவுடன் நமக்கு சேவை செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. அவர்களுக்கென்று ஒரு வாழ்க்கை இருக்கிறது. அதை நாம் புரிந்து நடந்து கொள்ள வேண்டும் என்பதாக மட்டுமே 'பவர் பாண்டி' கதையைப் பார்த்தேன்.
என் முன்னால் நடந்ததை அப்படியே எழுதினேன். புதிதாக நான் எதையும் யோசித்து எழுதவில்லை. 'பவர் பாண்டி' 2-ம் பாகம் எழுதி வைத்துள்ளேன். கண்டிப்பாக 2-ம் பாகம் வரும். ஆனால், அதற்கிடையில் வேறு ஏதாவது ஒரு படம் செய்கிறேனா என்பதற்கான விடை எனக்கே தெரியாது. 2-வது அல்லது 3-வது இயக்கமாக 'பவர் பாண்டி 2' இருக்கும்.
இவ்வாறு தனுஷ் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT