Published : 08 Jan 2017 05:39 PM
Last Updated : 08 Jan 2017 05:39 PM

த சேல்ஸ்மேன்: சூழலால் சிக்கும் மனிதர்கள்!



ஜன.9 - பெலாஸோ | இரவு 7.00 மணி | THE SALESMAN / FORUSHANDE | DIR: ASGHAR FARHADI | IRAN | 2016 | 125'

ஒரு த்ரில்லர் கதைக்களத்தை யதார்த்தமாக மனித உணர்வுகளோடு சொன்னால் எப்படி இருக்கும்? அதுதான் 'த சேல்ஸ்மேன்'.

நாடக நடிகர்களாக இருக்கும் இளம் தம்பதியினர் இக்கட்டான சூழலில் குடியிருந்த வீட்டினை விட்டு வேறொரு அபார்ட்மென்டுக்கு குடிபெயர்கிறார்கள். அதன்பின் நடக்கும் சம்பவங்களை கொஞ்சம் சஸ்பென்ஸ் கலந்து யதார்த்த பாணியில் மனித உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து சொல்லியிருக்கிறார் இயக்குநர் அஸ்ஹர் ஃபர்ஹடி. ஈரானிய நாட்டிலிருந்து அதிகாரபூர்வமாக 89வது ஆஸ்கார் விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள திரைப்படம்.

இங்கு யாருமே கெட்டவர்களும் இல்லை, நல்லவர்களும் இல்லை. சூழ்நிலைகளும் அப்போதைய செயல்பாடுகளுமே அவர்களது நிலையை தீர்மானிக்கின்றன என்பதை அஸ்ஹர் ஃபர்ஹடி தனது திரைக்கதையின் மூலம் நம்மிடையே சொல்கிறார். வேறொரு அடுக்குமாடி குடியிருப்புக்கு குடிபெயர்ந்த பின் தனது மனைவிக்கு நிகழ்ந்த சம்பவத்திற்கு காரணமானவனை கண்டுபிடிக்க முடியாமல் மனைவியின் பயத்தையும் போக்க முடியாமல் தனது இயலாமையுடனே தவிக்கிறான் எமட்.

அவனது மனைவி ரானாவோ தனக்கு நேர்ந்த சம்பவத்தின் பாதிப்பில் இருந்து மீள முடியாமல் அதேநேரம் அன்றாட வாழ்க்கையையும் எதிர்கொள்கிறாள். அனைத்துமே மிக யதார்த்தமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஈரானிய படங்களுக்கே உரிய பாணியில்.

நமக்கு தீங்கு செய்தவன் யார் என்று தெரிய வந்தால் அவனுக்கு நாம் திருப்பி செய்வது அதே தீங்காகத்தான் இருக்கும். அவனை மன்னித்துவிட யாருக்கும் மனம் இருப்பதில்லை. தீங்கினை செய்தவன் அதனை தெரியாமல் செய்துவிட்டதாக சொன்ன பின்பு நமது மனநிலை என்னவாக இருக்கும் அவனை மன்னிப்பதா இல்லை அவனை பழிவாங்குவதா என குழப்பமான மனநிலையில்தான் இருக்க வேண்டி வரும். இந்த குழப்பமான மனநிலையையும் மனிதர்களது உணர்வுகளையுமே தனது திரைக்கதையில் பரவ விட்டிருக்கிறார் அஸ்ஹர் ஃபர்ஹடி.

படத்தின் போக்கிலேயே சென்றால் பபக் மிக கெட்டவனாக மனசாட்சியில்லாத கொடூரனாக இருக்கக் கூடும் என தோன்றும். அவனை பழி வாங்கியே தீர வேண்டும் என்ற எண்ணம் பார்வையாளர்களான நமக்குள்ளும் எழும். ஆனால் அந்த பபக் யார் எனவும் அவன் எதற்காக அப்படி நடந்து கொண்டான் எனவும் அவனது சூழ்நிலையை விளக்கும்போது எமட் அவனை என்ன செய்யப் போகிறான் என்ற பயம் நம்மை அறியாமலேயே தொற்றிக் கொள்கிறது.

எமட்டும் பபக்கும் பேசிக்கொள்ளும் அந்தக் காட்சி எப்படி முடியப் போகிறது. எமட் அவனைப் பழி வாங்காமல் விட்டு விடுவானா? என ஏகப்பட்ட கேள்விகளை கடைசி 20 நிமிடங்கள் நமக்குத் தருகின்றன. அதற்கான விடைகளாக கடைசிக் காட்சி இருப்பதில்லை. ஆனால் அந்தக் கடைசி காட்சி நமக்குள் ஒரு கேள்வியை எழுப்புவது நிச்சயம். இதில் நல்லவர் யார்? கெட்டவர் யார்? எமட்டை நல்லவனாக கொண்டால் பபக் நிச்சயம் கெட்டவனாக இருக்க வேண்டும், ஆனால் பபக் கெட்டவன் இல்லை சூழ்நிலைதான் அப்படி செய்ய வைத்தது என உங்களுக்குள் அதற்கு எதிரான பதில் தோன்றும்.

ஆனால் இங்கே ரானா கடைசி வரை தனது நிலையிலிருந்து மாறுவது இல்லை, ஆனால் பபக் பற்றி தெரிந்ததும் அவனை மன்னித்துவிட நினைக்கிறாள். ஆனால் எமட்டிற்கு அது இயலவில்லை. கடைசியில் எமட் என்ன செய்கிறான்? பபக் என்னாவாகிறார் என்பதை 'த சேல்ஸ்மேன்' படத்தில் பார்க்கலாம்.

இப்படி சூழ்நிலைகளுக்குள் சிக்கிக் கொண்டு அதனை தீர்க்க முடியாமல் வெளிவரும் கதாபாத்திரங்களைச் சுற்றியே நிகழ்கிறது 'த சேல்ஸ்மேன்' கதைக்களம். கதை என்று சொல்லபோனால் ஆரம்பத்தில் நான் சொன்ன அந்த ஒரு வரிதான். ஆனால் அதன் பினால் இருக்கும் யதார்த்தத்தையும் மனித உணர்வுகளையும் படம் பிடித்த்தில் அஸ்ஹர் ஃபர்ஹடி தனித்து நிற்கிறார். மறுபடியும் யார் நல்லவர்கள்? யார் கெட்டவர்கள்? என்பதை கேட்டுக் கொள்ளுங்கள்.

இத்திரைப்படம் ஏற்கெனவே கான்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த நடிகர் மற்றும் சிறந்த திரைக்கதை ஆகிய இரு விருதுகளைப் பெற்றுள்ளது. கோவாவில் நடைபெறும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் 22.11.16 அன்று 'த சேல்ஸ்மேன்' திரைப்படம் திரையிடப்பட்டது. த்ரில்லர் கதைக்களத்தினை மனித உணர்வுகளோடு பேசியதில் 'த சேல்ஸ்மேன்' இன்னும் அற்புதமான திரை அனுபவமாக இருக்கும்.

- சா.ஜெ.முகில் தங்கம், தொடர்புக்கு: mukilthangam@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x